தேர்தல் பிரசாரத்தின்போது டிராபிக் ராமசாமி மீது கல்வீசி தாக்குதல்! ஜீப் கண்ணாடி உடைப்பு!!
ராயபுரம் : ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த டிராபிக் ராமசாமி மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அவரது ஜீப் கண்ணாடி உடைந்தது. அவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
சென்னை ஆர்.கே. நகரில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சுயேச்சையாக போட்டியிடுகிறார். அதற்காக தொகுதியில் அவர் தனது ஆதரவாளர்களுடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் இணைந்து சமூக ஆர்வலர் சசிபெருமாளும் பிரசாரம் செய்து வருகிறார்.
நேற்று மாலை கொருக்குப்பேட்டை இளையமுதலி தெருவில் டிராபிக் ராமசாமி, சசிபெருமாள் ஆகியோர் ஒரு வேனில் சென்று பிரசாரம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு இருந்த சிலர் அவரை தகாத வார்த்தைகளால் கேலி செய்ததாக கூறப்படுகிறது. உடனே ட்ராபிக் ராமசாமி ஜீப்பில் இருந்து இறங்கிவந்து அவர்களைத் தட்டிக்கேட்டார். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே சில மர்ம நபர்கள் மறைந்திருந்து டிராபிக் ராமசாமி மீது கல்வீசி தாக்கினர்.
இதில் அவர் லேசான காயமடைந்தார். அவரது ஜீப் கண்ணாடியும் உடைந்தது. இதனால் டிராபிக் ராமசாமி கல்வீசி தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி தனது ஆதரவாளர்களுடன் அங்கு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொருக்குப்பேட்டை போலீசார் விரைந்து சென்று அவர்களை சமரசம் செய்தனர். இதனால் மறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.