பாலாறு விவகாரம்: தமிழகத்தில் உள்ள ஆந்திர நிறுவனங்களுக்கு பாடம் புகட்டுவோம்- வேல்முருகன்
சென்னை: பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையின் உயரத்தை உயர்த்தும் நடவடிக்கையை ஆந்திரா அரசு கைவிட வேண்டும். இந்த விவகாரத்தில் ஆந்திரா அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
பாலாற்றின் குறுக்கே ஆந்திரா தடுப்பணை கட்டுவதை தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி எதிர்த்து போராடி வருகிறது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் போராட்டங்களைத் தொடர்ந்து தமிழக அரசும் தமது கடுமையான எதிர்ப்பை ஆந்திரா அரசிடம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் வாணியம்பாடி அருகே பாலாற்றின் குறுக்கே புல்லூர் தடுப்பணையை மேலும் 10 அடிக்கு உயர்த்தும் நடவடிக்கையை ஆந்திரா அரசு மேற்கொண்டு வருவது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனால் தமிழகத்தின் 2,000 ஏக்கர் விவசாயம் பொய்த்துப் போகும். அத்துடன் தமிழகத்தில் பாலாறு என்ற நதியே இல்லாமல் போய்விடும் அபாயம் உள்ளது.இதேபோல் தடுப்பணை அருகே உள்ள புல்லூர் கனகநாச்சியம்மன் கோவில் தமிழகத்துக்குச் சொந்தமானது. தற்போது இந்த கோவிலுக்கும் உரிமை கொண்டாடுகிறது ஆந்திரா.
ஆந்திராவின் இந்த அடாவடித்தனத்தைக் கண்டித்து போராட்டத்தில் குதித்து விவசாய பெருங்குடி மக்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழுமையாக ஆதரவு தெரிவிக்கிறது. பாலாறு படுகை விவசாயிகளின் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் பங்கேற்கிறது. பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையின் உயரத்தை உயர்த்தும் நடவடிக்கையை ஆந்திரா அரசு கைவிட வேண்டும். இந்த விவகாரத்தில் ஆந்திரா அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும்.
இதையும் மீறி ஆந்திரா அரசு தான்தோன்றித்தனமாக செயல்படுமேயானால் தமிழகத்தில் எந்த ஒரு ஆந்திராவைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களோ, கல்வி நிறுவனங்களோ ஒருபோதும் இயங்க விடாமல் பாடம் புகட்டுவோம் என எச்சரிக்கை விடுக்கிறேன்.
இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications