சென்னையில் மழையுடன் பேய்காற்று வீசுவதால் மக்கள் அச்சம்- போக்குவரத்து நெரிசல்
வர்தா புயல் சென்னையை நோக்கி 13 கி.மீ வேகத்தில் நெருங்கி வருவதால் பேய் காற்று வீசி வருகிறது. மக்கள் அச்சத்துடன் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
சென்னை: வர்தா புயல் இன்று பிற்பகலில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் வர்தா புயல் கரையை கடந்து வருவதாகவும், சென்னைக்கு கிழக்கே 150 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்
திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 20 செ.மீ. அளவிற்கு மழை பெய்யும் என்று பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார். வர்தா புயல் கரையை கடந்த பின்பும் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடல் சீற்றத்துடனும், கடல் அலைகள் 1 மீட்டர் உயரத்திற்கு எழக்கூடும் என்றும், மேலும் கடலோர மாவட்டங்களில் புயல் கரையை கடக்கும் போது கனமழை பெய்யும் என்றும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

பலத்த சத்தத்துடன் காற்று
வர்தா புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஞாயிறு இரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. அதிகாலை முதல் பலத்த காற்று வீசி வருகிறது. பலத்த சத்தத்துடன் காற்று வீசுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வெறிச்சோடிய மெரீனா
கடல் காற்று பலமாக வீசுவதால் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகின்றன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் மெரீனா கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது. மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகள் கூட வெளியே வராமல் முடங்கியுள்ளன.

போக்குவரத்து நெரிசல்
சென்னையில் மழை மற்றும் காற்று பலமாக வீசி வருகிறது. மழை மற்றும் வெளியூர் பேருந்து வருகையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வடபழனி முதல் கோயம்பேடு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவையில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை
பலத்த சத்தத்துடன் பேய்காற்று வீசுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications