ஒரே நாளில் 3 தீ விபத்து: மாணவி பலி; பல லட்சம் ரூபாய் பொருட்கள் நாசம்
காஞ்சிபுரம்/குமாரபாளையம்: தமிழகத்தில் வெவ்வெறு இடங்களில் நடைபெற்ற 3 தீ விபத்துக்களில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. காஞ்சிபுரம் அருகே தீ விபத்தில் சிக்கிய நர்சிங் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அருகே சோமங்கலம் அடுத்த நடுவீரப்பட்டு அன்னை தெரசாநகர் பகுதியை சேர்ந்தவர் சந்தியா(18), டிப்ளமோ நர்சிங் படித்து வந்துள்ளார்.
இவர் கடந்த செவ்வாய்கிழமை தனது வீட்டில் சமையல் செய்தபோது ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி தீக்காயம் அடைந்தார். காயம் அடைந்த அவரை அவரது உறவினர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சந்தியா சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அதிகாலை பலியானார். இதுகுறித்து சோமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மின்கசிவு விபத்து
குமாரபாளையத்தில் ஜவுளி குடோன் ஒன்றில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கிருந்த ஆறு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜவுளிகள் எரிந்து சாம்பலானது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சத்யாபுரி பகுதியை சேர்ந்தவர் பச்சியப்பன், இவர் மொத்த ஜவுளி விற்பனையாளர். குமாரபாளையத்தில் உற்பத்தியாகின்ற தளபதி ரக துண்டுகள், தளபதி ரக வேஷ்டிகள், தளபதி ரக லுங்கிகள், சபரிமலைக்கு செல்லும்போது பக்தர்கள் அணியும் கறுப்பு, நீல நிறக்கலர் லுங்கிகள் போன்றவற்றை மொத்தமாக வாங்கி அவற்றை ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஜவுளி சந்தையில் விற்பனை செய்து வருகிறார்.
மொத்தமாக வாங்கப்படும் ஜவுளி துணிகளை அவர் குமாரபாளையம் உயர்நிலை பள்ளி சாலையில் உள்ள குடோனை வாடகைக்கு எடுத்து அடுக்கி வைத்திருந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் ஜவுளி குடோனில் இருந்து திடீரென புகை மூட்டம் வெளியே கிளம்பி வந்தது. மேலும் துணி கருகிய வாசனை வீசியதால் அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்கள் ஜவுளி குடோனுக்கு சென்று பார்த்தனர். அங்கு தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்ததை கண்டவுடன் பச்சியப்பனுக்கு தகவல் கொடுத்தனர்.
அவர் பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜவுளி குடோனில் பிடித்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
தீயை கட்டுப்படுத்தினாலும் ரூ.6 லட்சம் மதிப்பிலான ஜவுளி ரக துணிகள் தீயில் கருகின. அங்கு வைத்திருந்த சைக்கிளும் எரிந்து நாசமானது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டதில் கான்கிரீட்டால் ஆன இந்த குடோனில் அதிகாலையில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்கு காரணமாக அமைந்துள்ளது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 ஏக்கர் கரும்பு காடு நாசம்
இதேபோல பண்ருட்டி அருகே கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 ஏக்கர் கரும்பு சேதமடைந்தது. பண்ருட்டி அடுத்த மணம்தவிழ்ந்தபுத்தூரை சேர்ந்தவர் ரவிசங்கர். இவருக்கு சொந்தமான நிலம் ஒறையூரில் உள்ளது. இவரது கரும்பு தோட்டத்தில் நேற்று முன்தினம் மாலை மின் கசிவு ஏற்பட்டு கரும்புகள் தீ பிடித்து எரிந்தன.
தகவலறிந்த பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் 2 ஏக்கர் கரும்பு எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications