மாணவனை அலேக்காக தூக்கி கீழே போட்ட சக மாணவன்.. மயங்கியதால் பயந்து போய் தற்கொலை!
பள்ளி மாணவனை தாக்கியதால் மாணவன் ஒருவன் பயந்துபோய் தற்கொலை செய்துகொண்டான்.
Recommended Video
கயத்தாறு: பயங்கரமான சண்டை காட்சிகள் எல்லாம் சினிமாவில்தான் வந்துகொண்டிருந்தது. இப்போதெல்லாம் பள்ளி மாணவர்களிடையே சர்வசாதாரணமாக தாண்டவமாட தொடங்கிவிட்டதை காலத்தின் கொடுமை என்றுதான் சொல்ல வேண்டும்.
கயத்தாறில் பாத்திமா மெட்ரிகுலேசன் என்ற மேல்நிலைப்பள்ளி ஒன்று பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இரண்டு பேருக்கும் உணவு இடைவேளையின்போது திடீரென சண்டை வந்துவிட்டது. அதனால் கைகலப்பும் ஏற்பட்டது. அப்போது ஒரு மாணவன் மற்றொரு மாணவனை அலேக்காக தூக்கி தரையில் ஓங்கி அடித்தார்.
அடித்த வேகத்தில் அந்த மாணவர் மயக்கம் அடைந்ததால் சக மாணவர்கள், அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன், மயக்கமடைந்த மாணவர் இறந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு பதறியடித்து கொண்டு தூக்கி சென்றனர். இதனை தாக்குதல் நடத்திய அந்த மாணவன் பதட்டத்துடன் பார்த்துக் கொண்டே இருந்தான். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவனுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் மயக்கமும் தெளிந்தது.
உறவினர்கள் கொந்தளிப்பு
இந்நிலையில் தாக்குதல் நடத்திய மாணவன் பள்ளி முடிந்து வீடு திரும்பவே இல்லை. இதனால் வீட்டிலுள்ளவர்கள் மாணவனை தேடிக் கொண்டு பள்ளி வந்தனர். அப்போது பள்ளியின் அருகில் உள்ள கிணற்றில் அவன் சடலமாக கிடந்ததை கண்டு அலறி துடித்தனர். தன்னால் தாக்கப்பட்ட மாணவன் இறந்தே போய்விட்டான் என்று நினைத்து கொண்டு பயந்த அந்த மாணவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால் மாணவன் தற்கொலை செய்யவில்லை, அவனை யாரோ கொலை செய்து கிணற்றில் வீசிவிட்டதாக உறவினர்கள் தரப்பு கொந்தளிக்கிறது. இது குறித்து உண்மை நிலவரம் அறிய காவல்துறையினர் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் மோதிக்கொள்ளும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
|
அப்படியென்ன கோபம்?
15 வயது இருக்குமா இந்த மாணவர்களுக்கு? அப்படியென்ன கோபம்? அப்படியென்ன வெறி இந்த வயதில்? நம் கண்களுக்கு குழந்தைகளாக தெரியும் இந்த பிள்ளைகள்தான் இப்படி பெரிய பெரிய காரியங்களை செய்து நம்மை சில சமயங்களில் நிலைகுலைய செய்து விடுகிறார்கள். இதற்கு முதல் காரணம், சமூகவலைதளங்கள்தான். அடுத்ததாக நம்பமுடியாத சண்டை காட்சிகளை திணித்து பார்க்க வைக்கும் மாய திரையுலகம். யார் எக்கேடு கெட்டால் என்ன என்று பார்முலாவே இல்லாமல் அதாவது நம்பகத்தன்மையே இல்லாமல் உருவகப்படுத்தி எடுக்கப்படும் சண்டை காட்சிகள்தான்.
பெற்றோர்களின் கடமை
மூன்றாவது காரணம், பெற்றோர்கள் பிள்ளைகளின் காட்டும் அணுகுமுறை. புத்திக்கூர்மைக்கும், தன் பிள்ளை பல துறைகளில் மிளிர வேண்டும் என்று பல பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பி வைக்கும் பெற்றோர்கள் கூடவே, அன்பு, பாசம், கருணை, மனிதாபிமானம், மன்னிப்பு, விட்டுக்கொடுப்பது, போன்றவற்றையும் சொல்லித்தந்து வளர்ப்பது இந்த காலகட்டத்தில் மிகவும் அவசியம்.
நம் பிள்ளைகள் நமக்கு முக்கியம்
நான்காவது, பள்ளி நிர்வாகம். இவ்வளவு பெரிய தகராறு பள்ளியில் நடந்திருக்கிறது, அதனை ஒரு ஆசிரியர் கூடவா பார்க்கவில்லை? பெற்றவர்களைவிட அதிக நேரம் பள்ளிகளிலேதான் பிள்ளைகள் இருப்பதால், அவர்களை கண்காணித்து நல்வழிப்படுத்த வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, மாணவர்களையும், இளைஞர்களையும் சீரழிக்கும் சமூகவலைதளங்களை அரசு கண்காணிக்க வேண்டும், கலாச்சார பாதிப்புகள் நடைபெறும் இணையதளங்களை உடனடியாக தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், நம் பிள்ளைகளை நம் கண்முன்னாலேயே இழக்க நேரிட்டுவிடும்.