ஓஎன்ஜிசிக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மாணவர் குபேரனுக்கு ஜாமீன்
ஒஎன்ஜிசிக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மாணவர் குபேரனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது சிதம்பரம் குற்றவியல் நீதிமன்றம்.
சிதம்பரம்: ஓஎன்ஜிசிக்கு எதிராகப் போராட்டம் நடத்திய ஆராய்ச்சிக்கு மாணவர் குபேரனுக்கு சிதம்பரம் குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்களுக்கு ஆதரவாக மாணவர்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் அதற்கு ஆதரவான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆராய்ச்சி படிப்பு மாணவர் குபேரன் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததாகக் கூறி கடந்த 20ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் தனது பேஸ்புக் பதிவில், "கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் தனது திட்ட பணிகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அங்கு போலீஸ் பாதுகாப்பை விலக்கிக் கொண்டு போராட்டத்தில் கைதான பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக போராடுபவர்களை தீவிரவாதிகளாக சித்திரிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் இனிவரும் காலங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து குறிப்பிட்ட இடத்தில் ஒன்று கூடி போராட்டம் நடத்த வேண்டும்" என்று கூறியிருந்தார்.
அவரது இந்தக் கருத்து போராட்டத்தைத் தூண்டுவதாக உள்ளது என்று கூறி போலீசார் அவரைக் கைது செய்தனர். இதையடுத்து ஜாமீன் கோரி சிதம்பரம் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் விசாரித்த நீதிமன்றம் மாணவர் குபேரனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.