எல்லாம் 'பகவான்' காட்டிய வழி.. அரக்கோணத்தில் ஆசிரியை இடமாறுதலை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்!
அரக்கோணத்தில் பள்ளி ஆசிரியரின் பணியிட மாறுதலை ரத்து செய்ய கோரி போராட்டம்
Recommended Video
அரக்கோணம்: அரக்கோணம் அருகே அரசு பள்ளி ஆசிரியை பணியிடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரக்கோணத்தை அடுத்துள்ள பகுதி சேந்தமங்கலம். இங்கு அரசினர் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 1200-க்கும் மாணவர்கள் படித்து வருகிறார்கள். இதில் தமிழாசிரியராக பணியாற்றி வந்தவர் விஜயா.
இவர் இதே பள்ளியில் 30 ஆண்டு காலம் பணியாற்றி வந்துள்ளார். அத்துடன் ஆசிரியர் விஜயா, மாணவர்களிடம் மிகவும் அன்பாகவும், இயல்பாகவும் நடந்து கொள்ளுபவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஆசிரியர் விஜயாவுக்கு பள்ளி கல்விதுறை பணியிட மாறுதலுக்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள், தங்களது தமிழ் ஆசிரியரை வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது என கோரி, தங்களது பள்ளியின் முன்பு வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையின் நடுவில் திரண்ட மாணவர்கள், ஆசிரியர் பணியிட மாற்றத்தை ரத்து கோரி முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மாணவர்களிடத்திலும்,பெற்றோர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கை குறித்து பரிசீலனை செய்யப்படும் என உறுதி அளித்து சமாதானம் செய்தனர். இதையடுத்து மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு தங்களது வகுப்புகளுக்கு சென்றனர்.