புறநகர் ரயிலில் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல்... 12 பேருக்கு அரிவாள் வெட்டு
திருவள்ளூர்: சென்னை, புறநகர் ரயிலில் இரு கல்லூரி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 12 பேர் காயமடைந்தனர்.
சென்னை சென்ட்ரலிலிருந்து அரக்கோணம் நோக்கி, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மின்சார ரயில் ஒன்று புறப்பட்டது. இதில், கல்லூரி மாணவர்கள் சிலர் பயணம் செய்தனர்.
ரயில் புறப்பட்டதிலிருந்து கல்லூரி மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, சுமன் என்ற மாணவர் தாக்கப்பட்டார். இந்த தகவலை செல்போன் மூலம் நெமிலிச்சேரியில் உள்ள தங்களது நண்பர்களுக்கு தெரிவித்தனர்.
இதையடுத்து நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் ஆயுதங்களுடன் காத்திருந்த ஒரு கும்பல் மின்சார ரயில், ஏறி மாணவர்களை அரிவாள், கத்தி, போன்றவற்றால் தாக்கியுள்ளனர். இதில் வேப்பம்பட்டைச் சேர்ந்த சண்முகம் (17), திருநின்றவூரைச் சேர்ந்த கணேஷ், திருவள்ளூரைச் சேர்ந்த பார்த்திபன், சுகன், கார்த்திக், முகமதுஅலி, இப்ராகிம், விக்னேஷ், ஜானகிரான், அஜித்குமார் (20), கடம்பத்தூரைச் சேர்ந்த கார்திக், புட்லூரைச் சேர்ந்த சரத்(18) ஆகிய 12 பேர் காயமடைந்தனர்.
மாணவர்களின் மோதல் குறித்து பொதுமக்கள், ரயில்வே காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த சென்னை பெரம்பூர் காவல் துறை உயர் அதிகாரிகள், இதுகுறித்து திருவள்ளூர் ரயில்வே போலீசாருக்கு வழக்கு பதிவுசெய்ய உத்தரவிட்டனர். இதையடுத்து, போலீசார் மோதலுக்கு காரணமான 4 மாணவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
மின்சார ரயில்களில் கல்லூரி மாணவர்கள் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்கின்றனர் என்றும், இதனால் பொதுமக்களும் பாதிக்கப்படுவதாகவும் பயணிகள் தெரிவித்தனர். மேலும், கூடுதலாக காவலர்களை நியமித்து பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்தனர்