ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து திண்டுக்கல்லில் ஏப்- 2ல் போராட்டம்.. மாணவர்கள் அறிவிப்பு
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து திண்டுக்கல்லில் வரும் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தப்படும் என மாணவர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல்: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக திண்டுக்கல்லில் வரும் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தப்படும் என மாணவர் இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் அனைத்து மாணவர்களும் இளைஞர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராம மக்கள் 22 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் அனுமதியின்றி ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது என்று கூறிய மத்திய அரசு கடந்த திங்கள் கிழமை ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்துக்கு அனுமதியளித்தது.
இதனை எதிர்த்து தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வரும் இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல்லில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என மாணவர் இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும் விவசாயிகளின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தை ஆதரித்தும் அணைத்து மாணவர்களின் சார்பாக தொடர் போராட்டம் நடைபெற உள்ளது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. திண்டுக்கல் கல்லறை தோட்டம் அருகில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் ,இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.