முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை
தேனி: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் நடவடிக்கை குறித்து அணையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மூவர் குழுவின் கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கேரள மாநிலம் தேக்கடியில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழக பொதுப்பணித்துறை செயலர் சாய்குமார், கேரள நீர்ப்பாசனத்துறை செயலர் குரியன், மத்திய நீர்வள ஆணைய தலைமைப்பொறியாளர் நாதன் ஆகிய மூவரும் பங்கேற்றனர்.
முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிவரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும். ஆனால் அணை பலவீனமாக இருப்பதாக கூறி கேரள அரசு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைத்துவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தீர்ப்பு அளித்தது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் எல்.ஏ.வி.நாதன் தலைமையில் அணை கண்காணிப்புக்கு மூவர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் கேரள மாநில நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் வி.ஜே.குரியன், தமிழ்நாடு பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எம்.சாய்குமார் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
தேக்கடி பெரியார் இல்லத்தில் நடந்த மூவர் குழுவின் ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கேரள அரசு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பின்னர் மூவர் குழுவின் தலைவர் எல்.ஏ.வி.நாதன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

சாலை சீரமைப்பு
முல்லைப் பெரியாறு அணைக்கு வல்லக்கடவில் இருந்து வாகனத்தில் வரும் சாலையை சீரமைக்க வேண்டும், அணைக்கு மின்சாரம் கொடுக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

துணைக்குழு செயல்பாடு
அணையில் இருந்து பேபி அணைக்கு செல்லும் பாதை சீரமைக்கப்பட வேண்டும். முல்லைப் பெரியாறு அணையின் மேற்பார்வை பணிக்காக துணைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந்தேதி முதல் இந்த துணைக்குழு செயல்பட தொடங்கும்.

செப்டம்பர் 26ல் ஆலோசனை
துணைக்குழுவின் அலுவலகம் தற்காலிகமாக கேரள பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் செயல்படும். வாரம் ஒருமுறை அணையை மேற்பார்வை செய்து மூவர் குழுவுக்கு துணைக்குழு அறிக்கை அளிக்கும். மூவர் குழுவின் அடுத்த ஆலோசனை கூட்டம் செப்டம்பர் 26-ஆம்தேதி நடத்தப்படும்.

நீர்மட்டம் குறித்த தகவல்
அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டினால் துணைக்குழு அணைப்பகுதியில் தங்கியிருந்து, ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அணையின் நீர்மட்டம், நீர்வரத்து குறித்து கண்காணித்து மூவர் குழுவுக்கு தகவல் தெரிவித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆய்வுக்கு கேரள அரசு பிரதிநிதி வராததற்கு தகவல் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கூறப்படுகிறது என்று எல்.ஏ.வி.நாதன் கூறினார்.

துணைக்குழு
துணைக்குழுவில் தமிழ்நாடு மற்றும் கேரள அரசு சார்பில் தலா 2 பிரதிநிதிகளும், அதன் தலைவராக மத்திய அரசு பிரதிநிதியும் உள்ளார். துணைக்குழு தலைவராக மத்திய நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் உம்கர்ஜித் கரிஷ்கிரிஷ், தமிழக அரசு பிரதிநிதிகளாக செயற்பொறியாளர் மாதவன், உதவி கோட்ட பொறியாளர் சவுந்திரம், கேரள அரசு பிரதிநிதிகளாக முதன்மை பொறியாளர் ஜார்ஜ் டேனியேல், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

142 அடி நீர் தேக்க முடியும்
தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் சாய்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பேபி அணைக்கு செல்லும் பாதையில் தீவுப்பகுதி எனப்படும் இடத்தில் விரைவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். 142 அடியாக நீர்மட்டம் உயர்வதில் இனி எந்தவித பிரச்சினையும் இல்லை.

152 அடியாக உயர்த்த
அடுத்தகட்டமான பேபி அணை, மண் அணை ஆகியவற்றில் கூடுதல் பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். கூடுதல் பலப்படுத்தும் பணிகள் உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்படி மேற்கொள்ளப்படும்'' என்றார்.












Click it and Unblock the Notifications