வாக்கி டாக்கியை பறிகொடுத்த சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
சென்னை: வாக்கி டாக்கியை பறிகொடுத்த காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சோமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் (51). இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, சோமங்கலத்தை அடுத்த எறுமையூர் சோதனைச் சாவடியில் பணியில் இருந்தார்.
அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்நேரத்தில் அந்த வழியாகச் சென்ற மர்மநபர் ஒருவர் சந்திரனிடம் இருந்த "வாக்கி டாக்கியை'த் திருடிச் சென்றார். மேலும், நீங்கள் தேடும் போலீஸ்காரர் குடிபோதையில் உள்ளார், ஓவர்..ஓவர் என்றும் அந்த நபர் குரல் கொடுத்து சக போலீசாரை கடுப்பேற்றியுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சோமங்கலம் ஆய்வாளர் அய்யனாரப்பன், தலைமையில் போலீஸார் திருட்டுப் போன "வாக்கி டாக்கியை'த் தேடி வந்தனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை மதியம் சோமங்கலம் காவல் நிலையத்துக்கு எதிரே அந்த "வாக்கி டாக்கி' போலீஸார் கண்டெடுத்தனர். இதுகுறித்து சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
முதல்கட்டமாக சப்-இன்ஸ்பெக்டர் மீது தவறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.