இரவை வீதியில் கழித்த கிராம மக்கள்...மேட்டூர் அருகே திடீர் நிலஅதிர்வால் பொதுமக்கள் பீதி !
சேலம்: மேட்டூர் அருகே உள்ள பூமனூர், மூலக்கடை ஆகிய கிராமங்களில் பலத்த சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் பீதி அடைந்த கிராம மக்கள் இரவில் வீதியிலேயே படுத்து தூங்கினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூரை அடுத்துள்ள பூமனூர், மூலக்கடை ஆகிய கிராமங்களில் நேற்று இரவு 9 மணியளவில் திடீரென பலத்த சத்தத்துடன் கூடிய நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வால் வீடுகளில் இருந்த பொருட்கள், பாத்திரங்கள் உருண்டு விழுந்தன. இதனால் வீட்டில் இருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. அதன்பிறகு மேற்கொண்டு எந்த அதிர்வும் ஏற்படவில்லை. இருப்பினும் பீதி அடைந்த கிராம மக்கள், வீடுகளுக்குள் தங்காமல் வீட்டின் வெளியே அதிர்ச்சியுடன் நள்ளிரவு வரை அமர்ந்திருந்தனர். பலர் வீதிகளிலேயே படுத்து தூங்கினார்கள்.
இதுகுறித்து மூலக்கடை கிராம மக்கள் கூறுகையில், நேற்று இரவு 9 மணியளவில் பலத்த சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டது. வீட்டில் இருந்த பாத்திரங்கள், பீரோ உள்ளிட்ட பொருட்கள் திடீரென கீழே விழுந்தன. உடனே அனைவரும் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தோம். சில நிமிடங்கள் மட்டுமே ஏற்பட்ட இந்த நில அதிர்வு எங்கள் பகுதியில் இதுவரை ஏற்பட்டது இல்லை என்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு கொளத்தூரை அடுத்த கருங்கல்லூர், சேத்துக்குளி போன்ற இடங்களிலும், தர்மபுரி மாவட்டம் காவிரி கரையோர பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications