நள்ளிரவில் கரண்ட் போகுதா? அப்போ காசு வரப்போகுதுன்னு அர்த்தம்!
சென்னை: சென்னையில் கடந்த இரு தினங்களாக பல இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவியதால் நகரின் பல பகுதிகள் இருளில் மூழ்கியது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் புழுக்கத்தில் தவித்த நிலையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யவே மின்சாரம் துண்டிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க ஆளும்கட்சியும், எதிர்கட்சியினரும் பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றனர்.
தேர்தல் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கோடி கோடியாக பணத்தை பறிமுதல் செய்து வந்தாலும் அவர்களை ஏமாற்றி விட்டு எந்த வழியிலாவது பணத்தை பட்டுவாடா செய்து விடுகின்றனர். பெட்ரோல் டோக்கன், மளிகைக்கடை கூப்பன், ஜவுளிக்கடை கூப்பன் என வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்களை அள்ளி வீசி வருகின்றனர்.
திடீர் மின்வெட்டு
தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறிவிட்டது என்றும் மின்வெட்டே இல்லை என்றும் ஜெயலலிதா பிரச்சாரம் செய்து வரும் நிலையில் கடந்த இரு தினங்களாக அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு பொதுமக்களை அவதிக்கு ஆளாக்கி வருகிறது.
சென்னையில் மின்சாரம் துண்டிப்பு
அண்ணாநகர், வடபழனி, நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, கிண்டி, ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் இரவு மின்வெட்டு நிலவியது. இதனால் மக்கள் வீடுகளில் புழுக்கம் தாங்காமல் தவித்தனர்.
பணப்பட்டுவாடா
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காகவே இது மாதிரி அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுத்துகின்றனர் என்ற புகார் எழுந்துள்ளது. நள்ளிரவு நேரங்களில் மின்சாரத்தை துண்டிவிட்டு, தேர்தல் அதிகாரிகளின் கவனத்தை திசை திருப்பிவிட்டு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
சேலத்தில் பணம் விநியோகம்
தேர்தல் அதிகாரிகளின் கெடுபிடி இன்று முதல் தொடங்குவதால் சேலத்தில் அதிமுகவினர் பணப்பட்டுவாடாவை முடித்து விட்டதாக திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். முக்கிய பகுதிகளில் பணப்பட்டுவாடா முடிந்து விட்டதாகவும், எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
ஜெ. ஸ்டிக்கர் காமாட்சி விளக்கு
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அத்திப்பள்ளம் அதிமுக மாவட்ட குழு உறுப்பினரான கவிதாவின் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ.3.87 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், ஜெயலலிதா ஸ்டிக்கர் ஓட்டிய 81 பித்தளை காமாட்சி விளக்குகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
பணம் கைமாறுவது எப்படி?
இதனிடைய தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சி சார்பில் முக்கிய தொகுதிகளுக்கு ரூ. 5 கோடி வரை பணம் கைமாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போலீஸ் பாதுகாப்புடன் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு விட்டதாகவும், வேட்பாளரிடம் இருந்து முக்கிய நிர்வாகிகள் மூலம் வாக்காளர்களுக்கு ஆளுக்கு ரூ. 250 ரூபாய் கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.