சங்கீத கலாநிதி விருது: முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த சுதா ரகுநாதன்

மியூசிக் அகாடமியால் ஆண்டுதோறும் சங்கீத கலாநிதி விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு பிரபல கர்நாடக பாடகி சுதா ரகுநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி தொடங்கவுள்ள அகாடமியின் 87வது இசைவிழா மற்றும் கருத்தரங்கை தலைமையேற்று நடத்தவும் சுதா ரகுநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2014ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி நடைபெறவுள்ள இசைவிழா (சதஸ்) நிறைவு விழாவில், சுதா ரகுநாதனுக்கு, 'சங்கீத கலாநிதி' விருது வழங்கப்படுகிறது.
மேலும், இந்த விழாவில், அகாடமியின் சார்பிலான சங்கீத கலா ஆச்சார்யா விருது பாடகர்கள் டி.பசுபதி, கல்யாணி சர்மா ஆகியோருக்கும், டி.டி.கே.விருது புல்லாங்குழல் கலைஞர் டாக்டர் பிரபஞ்சம் சீதாராமன், மிருதங்க கலைஞர் தஞ்சாவூர் ராமமூர்த்தி ஆகியோருக்கும் வழங்கப்படுகிறது.
இசை ஆராய்ச்சியாளர் விருது டாக்டர் ஆர்.எஸ்.ஜெயலட்சுமிக்கும், வயலின் இசைக் கலைஞருக்கான பப்பு வெங்கடராமையா விருது எச்.கே.நரசிம்மமூர்த்திக்கு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான நாட்டிய கலா ஆச்சார்யா விருது பிரபல பரதநாட்டிய கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரனுக்கு வழங்கப்படுகிறது. ஜனவரி மாதம் 3ஆம் தேதி நடைபெற உள்ள நாட்டிய விழாவில் இவ்விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் சங்கீத கலாநிதி விருது பெறும் பாடகி சுதா ரகுநாதன், இன்று முதல்வர் ஜெயலலிதாவை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.












Click it and Unblock the Notifications