மகளுக்கு வேலை... ஏமாற்றிய அமைச்சர்... விரக்தியில் தலைமைச்செயலகத்தில் அதிமுக நிர்வாகி தற்கொலை முயற்சி
சென்னை: மகளுக்கு வேலை வாங்கித் தருவதாக அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியம் ஏமாற்றியதால், மனமுடைந்து தலைமைச்செயலகத்தில் அதிமுக நிர்வாகி ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அக்ராபாளையத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி சண்முகம். இன்று இவர் சென்னை தலைமைச் செயலகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியனைக் காண வந்திருந்தார்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென சண்முகம் மறைத்து வைத்திருந்த விஷத்தை எடுத்துக் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த போலீசார், சண்முகத்தை மீட்டு சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தன் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து இரண்டு பக்க கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார் சண்முகம். அதில், தன் மகளுக்கு வேலை வாய்ப்பு கேட்டு அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியத்திடம் 2 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து ஏமாந்ததாகவும், அதனால் ஏற்பட்ட விரக்தி காரணமாக தற்கொலை செய்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் அதிமுக மற்றும் தலைமைச் செயலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே, திருநெல்வேலி வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில், அப்போது அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி பதவியை இழந்தார். இந்நிலையில், தற்போது அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியனும் அதே போன்ற பிரச்சினையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications