கொட்டுது கோடை மழை… நிரம்பிய நீர்நிலைகள் விவசாயிகள் மகிழ்ச்சி – 7 பேர் பலி
சென்னை: தமிழகம் முழுவதும் கொட்டிவரும் கோடைமழையால் குளம், கண்மாய்கள் நிரம்பி வழிகின்றன. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த இரு தினங்களில் கோடை மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதலே மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் சென்னையில் காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. புறநகர் பகுதியான பல்லாவரம், குரோம்பேட்டை, கீழ்கட்டகளையில் பலத்த மழை பெய்து வருகிறது.

சத்தியமங்கலம் மழை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் காலை முதலே கனமழை கொட்டிவருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

குற்றாலத்தில் மழை
தென்காசி, குற்றாலம், செங்கோட்டையில் கனமழை பெய்து வருகிறது. குற்றால அருவிகளில் தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தஞ்சை சுற்றுவட்டார கிராமங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.

திண்டுக்கல் இடி மின்னல்
திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்தது. வேடசந்தூர் சுற்றுவட்டராப்பகுதிகளில் விடிய விடிய கொட்டிய மழையால் வெங்காய மூட்டைகள் சேதமடைந்தன. செட்டிநாயக்கன்பட்டி, சின்னாளப்பட்டி, செம்பட்டியிலும் விடிய விடிய மழை கொட்டியது.

கொடைக்கானல் மண் சரிவு
பழநி சுற்றுவட்டாரப்பகுதியில் நேற்றிரவு முழுவதும் கன மழை பெய்தது. இதனால் பழநி- கொடைக்கானல் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

விவசாய பணிகள்
பழனியில் பெய்துள்ள கோடை மழையால் மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள், நெல், சோளம் போன்ற பயிர்களை பயிரிட நிலங்களை பண்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. பணிக்கம்பாளையம், வாய்க்கால்மேடு, பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

பவானி ஆற்றில் வெள்ளம்
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் தெரியாத வகையில், ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் வற்றியிருந்த நீரோடைகளில், தண்ணீர் பாய்ந்தோடுகிறது. மேட்டுப்பாளையம் சுற்று வட்டாரப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

ஒருவர் பலி
கோவையில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. ஆர்.எஸ் பரத்தில்மழை நீர் தேங்கிய குழிக்குள் விழுந்து ஒருவர் உயிரிழந்தார். இதன்மூலம் கடந்த இரு தினங்களில் கோடை மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

வீடுகளுக்குள் மழை நீர்
பல்லடம் அண்ணாநகரில் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் குடியிருப்புவாசிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

திருச்சியில் வெள்ளம்
திருச்சி சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால் சாலைகளில் முழங்கால் அளவிற்கு வெள்ளநீர் தேங்கியுள்ளது. ஸ்ரீரங்கத்தில் பெய்த மழைக்கு 4 வீடுகள் இடிந்து விழுந்தன. திருச்சியில் உறையூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

மழை நீடிக்கும்
இதனிடையே லட்சத் தீவுகள் - கேரள கடற்கரையை ஒட்டிய பகுதியில் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டிருந்தது. இந்தச் சுழற்சி அதே இடத்தில் நீடிக்கிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுவையில் ஆங்காங்கே சனிக்கிழமை பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications