இன்னும் 2 நாட்களுக்கு 105 டிகிரி வெயில் கொளுத்தும்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சென்னை: தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு 105 டிகிரிக்கு மேல் வெயில் உயர வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதே போல் புதுகையிலும் 105 வெயில் வாட்டி வதைத்து வருகின்றது.
தமிழகத்தில் 28 நாட்கள் அக்னி நட்சத்திர வெயில் மக்களை வாட்டி வதைத்தது.அதிகபட்சமாக 110 டிகிரி வரை சூரியன் கொளுத்தியது.

வாட்டி வதைக்கும் வெயில்:
ஜூன் மாதத்தில் தென் மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி தென் மேற்கு பருவமழை தொடங்கியது. அதனால் தொடர்ச்சியாக மழை பெய்யும் என்றும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தரைக்காற்று வெப்பம் அதிகரிப்பு:
சிறிதளவு பருவமழை பெய்து மக்களின் மனதை குளிர வைத்து விட்டு கானல் நீராய்க் கரைந்து விட்டது.அதனால், கடல் பகுதியில் இருந்து வீச வேண்டிய குளிர் காற்று வீசாமல் போனதால் தரைக் காற்றின் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியது.

வெயிலின் தாக்கம் அதிகம்:
இதன்மூலம் மேலும் வெயிலின் தாக்கம் தலைதூக்கத் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டியே இருந்தது. நேற்று அதிகபட்சமாக புதுச்சேரியில் 105 டிகிரி இருந்தது. சென்னை, மதுரை 104 டிகிரி, கடலூர், திருச்சி, தூத்துக்குடி 102 டிகிரி வெயில் நிலவியது.

கேரளாவிலும் மழை இல்லை:
மற்ற மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி என்ற அளவில் இருந்தது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை பெய்வதற்கான சூழல் அரபிக் கடல் பகுதியில் ஏற்படவில்லை. இதனால் நேற்று கேரளாவில் பெரிதாக மழையேதும் பெய்யவில்லை. தமிழகத்தில் இன்றும் நாளையும் 105 டிகிரி அளவுக்கு வெயில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெயிலின் தாக்கம்
கத்திரி வெயில் முடிந்தது முதல் புதுவையில் வெயிலின் தாக்கம் அதிகரித்தபடி உள்ளது. இந்த நிலைமை நேற்றும் நீடித்தது. காலை 10மணிமுதலே வெயிலின் அதிகமாக இருந்தது.

அனல் காற்று உக்கிரம்:
நேரம் செல்லச்செல்ல உக்கிரம் அதிகரித்தது. இதனால் பிற்பகலில் அனல் காற்று வீசியது. ரோட்டில் வாகனங்களில் செல்ல முடியாத அளவுக்கு வெப்பம் இருந்தது. முகத்தில் நெருப்பை அள்ளியது போன்ற உணர்வு ஏற்பட்டது.

சுற்றுலாப் பயணிகள் அவதி:
இந்த வெயில் காரணமாக ரோடுகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோர் எண்ணிக்கையும் வழக்கத்தைவிட குறைவாக காணப்பட்டது. நேற்று விடுமுறை தினம் என்பதால் புதுச்சேரிக்கு வந்த சுற்றுலா பயணிகளும் வெயில் கொடுமையினால் அவதியடைந்தனர்.

குளிர்பானங்களுக்கு கிராக்கி:
வெயில் கொடுமையில் இருந்து தங்களை காத்துக்கொள்ள குளிர் பானங்களை நாடினார்கள். மேலும் நுங்கு, இளநீர், வெள்ளரிக்காய் போன்றவற்றையும் விரும்பி வாங்கி சாப்பிட்டனர்.

கடற்கரையில் கூட்டம்
பகல் நேரம் முழுவதும் வெயிலில் வாடி வதங்கிய புதுச்சேரி மக்கள் மாலையில் காற்று வாங்கும் விதமாக கடற்கரை நோக்கி படையெடுத்தனர். இதனால் கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.












Click it and Unblock the Notifications