இன்னும் ஒரு வாரத்தில் வெயிலின் தாக்கம் குறையும் - வானிலை மையம் அறிவிப்பு

அக்னி நட்சத்திரம் முடிய இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் சென்னையில் வெயிலின் அளவு குறையாமல் கொளுத்த தொடங்கி உள்ளது.
மதுரை, நாகை, புதுச்சேரியில் நேற்று 100 டிகிரி வெயில் கொளுத்தியது. திருச்சி, கரூரில் 98 டிகிரியும் சென்னையில் 106 டிகிரியும் வெயில் சுட்டெரிக்கிறது.
வழக்கமாக சென்னையில் மதியத்திற்கு பிறகு கடல் காற்று வீசும் போது வெயிலின் அளவு ஓரளவு குறைந்து விடும். ஆனால் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் இரவிலும் புழுக்கம் அதிகம் காணப்படுகிறது.
இதுபற்றி வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது, " மற்ற நகரங்களை காட்டிலும் சென்னையில் மதியம் 4 மணிக்கு பிறகு வெப்பம் குறைந்து விடும். ஆனால் சில சமயங்களில் கடல் காற்று தாமதமாக வீசத் தொடங்கும் போதுதான் வெப்பம் அதே நிலையில் நீடிக்கும்.
தரைக்காற்று பகலில் வீசும் போது அனலாக இருக்கும். அந்த சமயத்தில் கடல் காற்று தரைப்பகுதிக்கு அதிகம் வராது.பின்னர் படிப்படியாக தரைக்காற்று குறைந்து கடல் காற்று அதிகம் கிடைக்கும் போது வெப்பம் குறையும்.
கேரளாவில் இன்னும் 1 வாரத்தில் தென் மேற்கு பருவ காற்று வீசத் தொடங்கும். அப்போது தமிழ்நாட்டிலும் பல பகுதிகளில் மழையை எதிர்பார்க்க முடியும். இந்த பருவ காலம் மாற்றத்தின் காரணமாக வெப்பம் குறைய தொடங்கும். சென்னையிலும் வெப்பம் 1 வாரத்தில் குறையும்" என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications