விடாமல் சுட்டெரிக்குதே சூரியன்... சென்னையில் இன்று 100 டிகிரி!
சென்னை: தமிழகத்தில் கன்னியாகுமரி, கோவையில் தென் மேற்குப் பருவ மழை பெய்து வரும் போதிலும் பிற பகுதிகளில் வெயில் இன்னும் கொளுத்தவே செய்கிறது. தலைநகர் சென்னையில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.
கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை வேகம் பிடித்துள்ளது. அதேபோல கேரளாவையொட்டியுள்ள கன்னியாகுமரி, கோவை, தேனி மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக தக்கலை, குழித்துறையில் தலா 5 செமீ மழை பதிவானது.

கன்னியாகுமரியில்
கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் இன்று அதிக அளவில் மழை பெய்துள்ளது. இரணியல், குளச்சல், நாகர்கோவிலில் தலா 3 செமீ மழை பெய்துள்ளது.

விடாத வெயில்
தமிழகத்தின் இதர பகுதிகளில் வெயில் தொடருகிறது. குறிப்பாக சென்னையில் இன்னும் வெயில் முழுமையாக அடங்கவில்லை. சென்னையில் 3 நாட்கள் விட்டு விட்டும், மாலை-இரவிலும் பலத்த மழை பெய்தது. தற்போது மழையைக் காணோம்.

சுட்டெரிக்கிறது
சென்னையிலும் கடலோர பகுதியிலும் மழை குறைந்துள்ளது. மீண்டும் வெப்பம் அதிகரித்து வெயில் சுட்டெரிக்கிறது. நேற்று சென்னையில் 100 டிகிரி வெயில் அடித்தது. இன்றும் 100 டிகிரியை வெயில் தொட்டது.

கானல் நீர்
வெயில் கொளுத்தியதால் சாலைகளில் மக்கள் அவஸ்தையை அனுபவிக்க நேரிட்டது. பல சாலைகளில் கடும் வெயில் காரணமாக கானல் நீரையும் பார்க்க முடிந்தது.

வார இறுதியில் மழை வரும்
இந்த வார இறுதியில் அதாவது வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சென்னையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications