திருமங்கலத்தில் சசிகலாவிற்கு ஆதரவும் எதிர்ப்பும் சரிசமமா இருக்கே!
திருமங்கலம் தொகுதியில் சசிகலா போட்டியிட்டால் நாங்கள் உண்ணாவிரதம் இருந்து எதிர்ப்பு தெரிவிப்போம் என்று பெண் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைப்போம் என்று திருமங்கலம் தொகுதி அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா மறைந்த பின், சசிகலா முதல்வராக வரவேண்டும் என முதன் முதலாக குரல்கொடுத்து சசிகலாவின் கவனத்தை ஈர்த்தவர் அமைச்சர் உதயகுமார். ஜெயலலிதாவிடம் பக்தியை காண்பித்த உதயக்குமார். தற்போது தனது திருமங்கலம் தொகுதியை சசிகலாவுக்காக விட்டுக்கொடுக்க முன்வந்துள்ளார். திருமங்கலம் சட்டசபை தொகுதியில் சசிகலாவிற்கு ஆதரவும், எதிர்ப்பும் சரிசமமாகவே உள்ளது.
சசிகலா திருமங்கலத்தில் போட்டியிட்டால் எளிதாக ஜெயிக்கலாம் என கூறி சசிகலாவின் திவிர பக்தராகவே மாறியுள்ளார் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார். திருமங்கலம் தொகுதியில் சசிகலா போட்டியிடுகிறாரோ இல்லையோ அவருக்கு ஆதரவான போஸ்டர்களையும், ப்ளெக்ஸ் பேனர்களையும் பிரம்மாண்டமாக வைத்து கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
அமைச்சர் ஆதரவாளர்கள்
திருமங்கலம் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏவாக இருப்பவர் அமைச்சர் ஆர்.பி உதயகுமார். ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளரும் அவரே. இவர்தான் சசிகலா முதல்வராக கோரி தீர்மானம் நிறைவேற்றி அதை சசிகலாவிடம் அளித்தார் உதயகுமார்.
ராஜினாமா ஸ்டண்ட்
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட பின்னர் அவரை முதல்வராக்க வேண்டும் என்று முழு முனைப்புடன் செயல்பட்டு வருகிறார் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார். இதன் ஒருபகுதியாகவே தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தார்.
சசிகலாவை முதல்வராக்குவோம்
திருமங்கலத்தில் அதிமுகவில் நகரச் செயலாளர் விஜயன், முன்னாள் நகராட்சி தலைவர் நிரஞ்சன் தலைமையில் இரண்டு கோஷ்டிகளாக உள்ளனர். இவர்களில் நிரஞ்சன் தலைமையிலான அணியினர் திருமங்கலத்தில் சசிகலா போட்டியிட ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
வெற்றிக்காக பாடுபடுவோம்
திருமங்கலத்தில் சசிகலா போட்டியிட்டால் அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைப்போம் என்று கூறியுள்ளனர். சசிகலாவின் வெற்றிக்காக பாடுபடுவோம் என்றும் அவர் முதல்வராக வேண்டும் என்று திருமங்கலம் தொகுதி அதிமுகவினர் விரும்புவதாகவும் தெரிவித்தார்.
கடுமையான எதிர்ப்பு
அதே நேரத்தில் சசிகலாவை பெண் தொண்டர்கள் பெரும்பாலோனோர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஜெயலலிதாவின் தாலிக்கு தங்கம், ஆடு மாடு திட்டம், வீடு கட்டும் திட்டத்தின் மூலம் பயனடைந்த பலரும் சசிகலாவை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்றே தெரிகிறது.
உண்ணாவிரதம் இருப்போம்
திருமங்கலம் சட்டசபை தொகுதியில் சசிகலா போட்டியிட்டால் நாங்கள் யாரும் ஓட்டு போட மாட்டோம். அவர் இங்கே நிற்கப் போகிறார் என்றால் நாங்கள் எல்லோரும் சேர்ந்து உண்ணாவிரதம் இருப்போம் என்றும் பெண் தொண்டர்கள் கூறுகின்றனர்.
எதிர்ப்பை சமாளிக்க முடியுமா?
சசிகலா சென்னையில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்றுதான் தென் மாவட்டத்தை தேர்ந்தெடுத்துள்ளார். இவர் திருமங்கலம், ஆண்டிபட்டி, மதுரை கிழக்கு ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்றினை தேர்வு செய்தாலும் அவரால் ஜெயிக்க முடியுமா? முதல்வர் நாற்காலியில் அமரமுடியுமா என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.