திருநங்கைகளுக்கு 'மூன்றாம் பாலின' அங்கீகாரத்துடன் சலுகைகள்: உச்ச நீதிமன்றம்
சென்னை: திருநங்கைகளுக்கு 'மூன்றாம் பாலினம்' என்ற அங்கீகாரத்துடன், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநங்கைகளை 'சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள்' ஆகக் கருதி, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் உரிய சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
திருநங்கைகள் தொடர்பான வழக்கில் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், கூறியுள்ளதாவது:

"ஒவ்வொரு மனிதரும் தமது பாலினத்தைத் தேர்வு செய்துகொள்வதற்கு உரிமை உள்ளது. சாதி, மத, பாலினத்துக்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் சமஉரிமை வழங்கிட அரசியலமைப்பு வழிவகுக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, நம் சமூகத்தில் திருநங்கைகள் மிகவும் சிறுமைப்படுத்தப்படுவதாகவும், மருத்துவமனைகளில் கூட அனுமதி மறுக்கப்படுவதாகவும் தேசிய சட்ட சேவை ஆணையம் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருந்தது.

இந்த நிலைமைக்கு வேதனை வெளியிட்ட உச்ச நீதிமன்றம், சமூக நலத் திட்டங்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடமை என்று தெரிவித்துள்ளது.
மேலும், கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை திருநங்கைகள் பெறுவதற்கு, உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநங்கைகளைக்கு பாலின அங்கீகாரத்துடன் சமஉரிமை வழங்கிட வழிவகுக்கும் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications