உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையின்போது பெண் சாவு.. விசாரணை குழு அமைத்த தமிழக அரசு
சென்னை: உடல் எடையை குறைப்பதற்காக அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரிக்க 2 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
திருவண்ணாமலையை சேர்ந்த வளர்மதி (46) என்ற பெண்ணுக்கு கீழ்பாக்கம் தனியார் மருத்துவமனையில் உடல் எடை குறைக்க நேற்று இரவு அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதில் அந்த பெண் உயிரிழநத்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரின் கணவர் அழகேசன் அளித்த புகாரை அடுத்து கிழ்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
150 கிலோ எடையை குறைக்க ஆகஸ்ட் 23ம் தேதி கீழ்பாக்கம் தனியார் மருத்துவமனையில் வளர்மதி அனுமதிக்கப்பட்டதும், இதுவரை வளர்மதிக்கு 8 அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளதும் தெரியவந்தது.
நேற்று நடந்த 9வது அறுவை சிகிச்சைக்கு பின் வளர்மதிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வளர்மதி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தனது மனைவி உயிரிழந்துவிட்டார் என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில்,
வளர்மதி மரணம் குறித்து விசாரிக்க 2 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
இந்த குழுவில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர்,கண்காணிப்பாளர் இருப்பதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.