கோவையில் பதுங்கியிருந்த கேரள சிமி தீவிரவாதி கைது!
கோவை: கோவையில் பதுங்கி இருந்த கேரளாவைச் சேர்ந்த சிமி இயக்க தீவிரவாதி நஜீப்பை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கொச்சி மூவாற்றுப்புழாவை சேர்ந்தவர் ஜோசப். இவர் அங்குள்ள கிறிஸ்தவ கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 2010-ம் ஆண்டு இவர் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு தேர்வுக்கான வினாத்தாளை தயாரித்தார். அதில், மாற்று மதத்தினரை புண்படுத்தும் விதமான கேள்வி இடம் பெற்றிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதையடுத்து ஜோசப் கைது செய்யப்பட்டார்.

இவரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. பின்னர் ஜாமீனில் வெளிவந்த ஜோசப் சம்பவத்தன்று குடும்பத்தினருடன் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய போது ஒரு கும்பல் வழிமறித்து ஜோசப்பின் கையை, மணிக்கட்டுடன் வெட்டி வீசி விட்டு தப்பினர். முதலில் இதுதொடர்பாக உள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த வழக்கில் தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு தேசிய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்த கொலை முயற்சி வழக்கில் விசாரணை நடத்தி சிலரை கைது செய்தனர்.
இதில் 31-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நஜீப் கோவை டவுன்ஹாலில் உள்ள ஒரு விடுதியில் பதுங்கியிருப்பதாக தேசிய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் கோவை வந்து நஜீப்பை கைது செய்தனர்.
இவர் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட ‘சிமி' அமைப்பைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது.
நஜீப் கடந்த 5 ஆண்டுகளாக கோவையில் பதுங்கி இருந்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் கோவையில் பதுங்கி இருந்த போது அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் சிலர் செய்துள்ளனர். எனவே நஜீப்புக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்-யார்? அவர்களுக்கும் நஜீப்புக்கும் என்ன தொடர்பு உள்ளது? தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த வேறு யாரேனும் கோவையில் பதுங்கி உள்ளார்களா? என தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications