மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுற்றிய மர்ம நபர்: செல்போனில் தீவிரவாதி அப்சல்குரு போட்டோ
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றிய நபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. சோதனை செய்ததில் அது பொய்யான மிரட்டல் என்பது தெரிய வந்தது.
இந்நிலையில் இன்று மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சந்தேகப்படும்படி ஒருவர் சுற்றுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியைச் சேர்ந்த முகமது அலி ஜின்னாவின் மகன் முத்து முகமது(30) என்பதும், மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்த அவர் கோவிலை சுற்றிப்பார்க்க வந்ததும் தெரிய வந்தது.
அவரது செல்போனை சோதனையிட்டபோது அதில் அண்மையில் தூக்கிலிடப்பட்ட தீவிரவாதி அப்சல்குருவின் புகைப்படம் மற்றும் பழனிபாபாவின் பேச்சும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முத்து முகமது ஒரு இயக்கத்தின் நிர்வாகி என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.