ஜெயலலிதா 'மர்ம சாவுக்கு' இதுதான் காரணம்.. எஸ்.வி.சேகர் மட்டமான கருத்து.. கொதிக்கும் அதிமுக
Recommended Video

சென்னை: ஜெயேந்திரரை கைது செய்ததன் காரணமாக ஜெயலலிதாவின் சாவு விடை தெரியாத மர்மமாகியுள்ளது என்ற அர்த்தத்தில் பேட்டியளித்துள்ளார் முன்னாள் எம்எல்ஏவும், பாஜக கட்சியை சேர்ந்தவரும், திரைப்பட நடிகருமான எஸ்.வி. சேகர்.
டிவி சேனல் நேர்காணல் ஒன்றில் எஸ்.வி.சேகர் அளித்த இந்த பேட்டி அதிமுகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் நிகழ்ச்சியொன்றில், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது, காஞ்சி மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்ததாக சர்ச்சை எழுந்தது.

தமிழ்த்தாய் வாழ்த்து
இதுகுறித்த கேள்விகள் நேர்காணலில் எழுப்பப்பட்டன. அப்போது, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டும் என்பது தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்க வேண்டும் என்பதை போல சட்டத்தால் கட்டாயப்படுத்தப்படவில்லை என்பதால் விஜயேந்திரர் செயல் தவறில்லை என்றார். குருநிந்தனை என்பது பாவத்திற்கு பரிகாரம் உண்டு, சாபத்திற்கு பரிகாரம் கிடையாது என்றார் எஸ்.வி.சேகர்.

அதிமுக எம்எல்ஏ
2004ல் காஞ்சி மடாதிபதி, ஜெயேந்திரரை, ஜெயலலிதா அரசு கைது செய்தது. ஆனால் ஜெயேந்திரரை குருவாக மதிக்கும் நீங்கள், 2006ல் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக ஆனீர்களே என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு, "என்ன விஷயம் என்று ஜெயலலிதாவுக்கு சொல்வதற்காக, ஒருவர் கட்சிக்குள் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்" என்று சேகர் மழுப்பலான பதில் அளித்தார்.

மட்டமான கருத்து
யார் குருவை நிந்திக்கிறார்கள் என்பதை பொறுத்துதான், எதிர்வினையும் இருக்குமா? ஜெயலலிதா நிந்தித்ததாக நீங்கள் நினைத்தால் அதற்கான எதிர்வினை இல்லையே? என்ற தொகுப்பாளர் கேள்விக்கு எஸ்.வி.சேகர் அளித்த பதில் ஷாக் ரகம். "ஏன் எதிர்வினை இல்லை. 2006ல் ஆட்சியே போச்சே. அதுதான் எதிர்வினை. அவ்வளவுதான் முடிந்து போச்சு. ராணி மாதிரி இருந்த ஜெயலலிதா மரணம், இன்றுவரை சர்ச்சையாகியுள்ளது. பிராமண சமுதாயத்தில் பிறந்தவர்களை எரியூட்ட வேண்டும். ஆனால் ஒரு டப்பாவில் போட்டு உள்ள போட்டுள்ளார்கள். இதைத்தான் சொன்னேன், பாவத்திற்கு பரிகாரம் உண்டு, சாபத்திற்கு பரிகாரம் கிடையாது. அவ்வளவுதான்" என்றார், எஸ்.வி.சேகர்.

அதிமுக அசுத்தம்
2006ல் ஜெயலலிதா எதிர்வினையால்தான் தோற்றதாக கூறுகிறீர்களே, அதே ஆண்டில் நீங்கள் அதிமுக சார்பில் எம்எல்ஏ தேர்தலில் போட்டியிட்டீர்களே? என்ற கேள்விக்கு நான் இருக்கிற இடம் அசுத்தமாக இருந்திருக்கலாம். நான் சுத்தமாக இருந்தேன். ஒரு பைசா நான் கையாடல் செய்யவில்லை என்று சம்மந்தம் இல்லாத பதிலை சொன்னார் எஸ்.வி.சேகர்.

ராட்சஸதனமாம்
எதிர்வினை என்பது இடத்திற்கு இடம் மாறுபடுமா என்ற கேள்விக்கு? "ஆம், இடத்திற்கு இடம் மாறும். ஒரு கொசு வந்து கடித்தால் ஓங்கி அடிப்பீர்கள். குழந்தைகள் உங்களை அடித்தால் திருப்பி அடிப்பீர்களா? ஜெயேந்திரர் இப்போது குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டுள்ளார்" என்று எஸ்.வி.சேகர் தெரிவித்தார். மற்றொரு கேள்விக்கு, ஜெயலலிதாவிடம் ஒரு பயம் இருந்தது உண்மைதான். அது ராட்சஸ தனமான பிகேவியருக்குண்டான பயம். கோர்ட்டுக்கு போனால் ஒருவர் வாதிடுவார், பதிலுக்கு மற்றொருவர் வாதிடுவார். ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் அப்படி நடக்க முடியவில்லை. ஓரளவுக்கு கருணாநிதி ஆட்சியிலும் அப்படி நடக்க முடியவில்லை. அந்தந்த துறைகளுக்குதான் தெரியும். எதிர்வினையாற்ற முயற்சி செய்தவர்களுக்கு என்ன ஆனது என்பது தெரியும் என்றார்.

அதிமுக கோபம்
இதனிடையே, இந்த பேட்டியின் மூலம், ஜெயலலிதா மரணத்தில் நிலவும் சர்ச்சையை, எஸ்.வி.சேகர் வரவேற்கிறார், என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவரது பேட்டி ஜெயலலிதா மரணத்தை ரசிப்பதை போல உள்ளது என்பது அதிமுக நிர்வாகிகள் குற்றச்சாட்டு. அதிமுக ஐடி பிரிவினர் சமூக வலைத்தளங்களில் எஸ்.வி.சேகருக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். ஜெயலலிதாதான் எஸ்.வி.சேகருக்கு, அரசியலில் வாழ்வளித்தார். ஆனால் ஜெயலலிதா மரணத்தை பற்றி எஸ்.வி.சேகர் இப்படி மோசமான கருத்தை கூறியுள்ளார் என்று அதிமுகவினர் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications