கருணாநிதியை நம்ப முடியாது.. ஏமாற்றி விடுவார்... சு. சாமி அதிரடி!
மதுரை: பொது வேட்பாளர் விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை நம்ப முடியாது. அவர் ஏமாற்றி விடுவார். ஏற்கனவே என்னை ஏமாற்றியவர்தான் அவர். அவரை நம்பி எந்த முடிவையும் எடுக்க முடியாது என்று சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
ராமநாதபுரத்தில் முத்துராமலிங்கத் தேவர் பெயரில் பல்கலைக் கழகம் அமைக்க வலியுறுத்தி மதுரையில் சுப்பிரமணியன் சுவாமி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார். பாரதிய ஜனதா கட்சியில் இருக்கு சுப்பிரமணியன் சுவாமி விராத் ஹிந்துஸ்தான் சங்கம் என்ற இந்துத்துவா அமைப்பையும் நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் சார்பில் இன்று மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சுப்பிரமணியன் சுவாமி தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் மறைக்கப்பட்ட ஆவணங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும்; ஆகஸ்ட் 15-ந் தேதிக்குள் ஆவணங்களை வெளியிடாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். ராமநாதபுரத்தில் முத்துராமலிங்கத் தேவர் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் சுவாமி பேசுகையில், சென்னை ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை எதிர்த்து பொதுவேட்பாளர் நிறுத்துவது குறித்து நான் இப்போது எதையும் கூற முடியாது. தமிழகத்தில் எதிர்கட்சிகள் முதலில் ஒன்று சேரட்டும். அதன் பின்னர் பொதுவேட்பாளர் குறித்து பேசலாம்.
இந்த பிரச்னையில் திமுக தலைவர் கருணாநிதியை நான் நம்பமாட்டேன். அவர் ஏமாற்றி விடுவார். 1996ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் எனக்கு சீட் தருவதாக கூறி ஏமாற்றிவிட்டார். மூப்பனார் சிபாரிசு செய்தும் கூட, சுப்ரமணியசாமிக்கு சீட் கொடுத்தால் அவர் தமிழகத்தையே எடுத்துக் கொண்டு விடுவார் என்று கூறியவர் கருணாநிதி. எனவே அவரை நம்பி எந்தக் காரியத்திலும் ஈடுபட முடியாது என்றார் சுவாமி.












Click it and Unblock the Notifications