சுவாதி கொலை வழக்கு: கொலையாளியை அடையாளம் காண புழல் சிறையில் அணிவகுப்பு
சென்னை: பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் சென்னை புழல் சிறையில் கொலையாளியை அடையாளம் காணும் அணிவகுப்பு நீதிபதி சங்கர் முன்னிலையில் நடைபெற்றது. கொலையாளியை அடையாளம் காட்ட சுவாதியின் தந்தை சந்தானகோபாலகிருஷ்ணன் வரவழைக்கப்பட்டிருந்தார்.
சென்னை சூளைமேட்டை சேர்ந்த பொறியாளர் சுவாதி கடந்த மாதம் 24-ந்தேதி நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை அடுத்துள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை கைது செய்துள்ளனர்.
தற்போது ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுவாதி கொலை செய்யப்பட்ட போது, ரயில் நிலைய பிளாட்பாரத்தில் உள்ள கேண்டீனில் வேலை பார்க்கும் ஊழியர், தமிழ்ச்செல்வன் என்ற ஆசிரியர் மற்றும் சிலர் கொலையாளியை நேரில் பார்த்துள்ளனர்
இதனால் கொலையாளியை அடையாளம் காட்டும் விதமாக ராம்குமார் மற்றும் பிற நபர்களை வரிசையாக நிற்கவைத்து அடையாள அணி வகுப்பு நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
இந்த அடையாள அணிவகுப்பை நடத்துவதற்கு ஒரு நீதிபதியை நியமிக்கும்படி சென்னை எழும்பூர் தலைமை மாஜிஸ்திரேட்டிடம், நுங்கம்பாக்கம் போலீசார் மனு கொடுத்தனர். இந்த மனுவை விசாரித்த தலைமை மாஜிஸ்திரேட் இந்த அடையாள அணிவகுப்பை நடத்த, சென்னையில் உள்ள மூத்த சிவில் நீதிபதியும், சைதாப்பேட்டை 9-வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதியுமான ஆர்.சங்கரை நியமித்து உத்தரவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை சென்னை புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. அப்போது அடையாளம் காண சுவாதியின் தந்தை சந்தானகோபாலகிருஷ்ணன் வரவழைக்கப்பட்டிருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி சங்கர், உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி அணிவகுப்பு நடைபெற்றது; இந்த விவரங்கள் உநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.