ராம்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி.. இது பாதியில் "எஸ்" ஆன கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்தது!
சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. புலன் விசாரணை முடியாததால் ராம்குமாரை ஜாமீனில் விடுவிக்க முடியாது என நீதிபதி கூறியுள்ளார்.
கடந்த ஜூன் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியை வெட்டிக் கொலை செய்ததாக சிசிடிவி வீடியோ ஆதாரத்தை வைத்து விசாரணை நடத்திய போலீசார், நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தில் ராம்குமாரை கைது செய்தனர்.
ராம்குமாருக்கு ஜாமின் வழங்க கோரி, கடந்த 5 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை வக்கீல் மகேந்திரன் என்பவர் தாக்கல் செய்திருந்தார். இந்த கடந்த 7ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ராம்குமார் சார்பில் வக்கீல் ஜி.கிருஷ்ணமூர்த்தி ஆஜரானார்.
அப்போது, ராம்குமாருக்கு தெரியாமலேயே இந்த ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விளம்பரத்துக்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அதை தள்ளுபடி செய்யவேண்டும் என்று அரசு தரப்பு வக்கீல் கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.
இதையடுத்து மாவட்ட முதன்மை செசன்சு நீதிபதி ஜெயசந்திரன், ஜாமீன் மனு தாக்கல் செய்ய குற்றச்சாட்டுக்கு ஆளான நபர்களிடம் இருந்து வக்காலத்து மனுவில் கையெழுத்து வாங்கத் தேவையில்லை. ஆனால், இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ராம்குமாருக்கு தெரியாமலேயே இந்த ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசு வக்கீல் சந்தேகத்தை கிளப்பியுள்ளார். அதனால், இதுகுறித்து மனுதாரர் தரப்பு வக்கீல்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறி விசாரணையை 15ம்தேதிக்கு தள்ளிவைத்தார்.
அதே நேரத்தில் ராம்குமார் ஜாமீன் மனு மீதான விசாரணையில் இருந்து விலகிக்கொள்வதாக வக்கீல் ஜி.கிருஷ்ணமூர்த்தி தன்னுடைய முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர், ராம்குமாருக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.
ராம்குமார் தற்போது விசாரணைக் காவலில் உள்ளதையும், அவரிடம் விசாரணை தொடர்ந்து நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், சுவாதி கொலை வழக்கு தொடர்பாக தற்போது புலன்விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் மனுதாரர் சார்பில் யாரும் ஆஜராகவில்லை எனக்கூறி ராம்குமாரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.