என் மகளை ஏன் இப்படி செய்தாய்.. சிறைக்குள் ராம்குமார் கையை பிடித்தபடி கதறிய சுவாதி தந்தை
சென்னை: என் மகளை ஏன் இப்படி செய்தாய்... என்று புழல் சிறைக்குள் நடந்த அடையாள அணி வகுப்பின்போது, ராம்குமாரின் கையை பிடித்துக் கொண்டு கதறி அழுதுள்ளார் சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன்.
இன்போசிஸ் ஊழியர் சுவாதி கடந்த மாதம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து வாலிபர் ஒருவரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
புழல் சிறையில் ராம்குமார் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை இதற்கு முன்பு நேரில் கண்ட சாட்சிகளை அழைத்து வந்து, அடையாளம் காட்டும் பணி நடைபெற்றது.

அடையாளம் காட்டிய கடைக்காரர்
நீதிபதி சங்கர், இந்த அடையாள அணிவகுப்பை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கடை வைத்துள்ள சிவகுமார், சுவாதியின் தந்தை ஆகியோர் அடையாள அணி வகுப்பின்போது குற்றவாளியை அடையாளம் காட்டினர்.

35 பேர் ரெடி
ராம்குமார் போன்ற உருவ ஒற்றுமை கொண்ட 35 சிறை கைதிகளை போலீசார் தயார்படுத்தி வைத்திருந்தனர். அதில், 10 பேரை மட்டும் நீதிபதி தேர்ந்தெடுத்து வரிசையில் நிறுத்த உத்தரவிட்டார்.

தையல் பிரச்சினை
வழக்கத்துக்கு மாறாக இந்த வழக்கின் அடையாள அணி வகுப்பில், ஒரு சிக்கல் இருந்தது. ஏனெனில் ராம்குமாருக்கு கழுத்தில் தையல் போடப்பட்டிருந்தது. அந்த படம் ஊடகங்களிலும் வெளிவந்துவிட்டது. எனவே அதை மறைத்தால்தான் சாட்சியங்களை குழப்பி உண்மையை கண்டறிய முடியும்.

மறைக்கப்பட்டது
இதையடுத்து, அணி வகுப்பில் நிறுத்தப்பட்ட ராம்குமார் உள்ளிட்ட அனைவருக்குமே கழுத்தை சுற்றி ஒரு டவலை போர்த்தி காயத்தை மறைக்கலாமா என போலீசார் யோசித்தனர். பிறகு, அந்த யோசனையை கைவிட்டு, அனைவர் கழுத்திலும் பஞ்சு வைத்து, அதன் மீது பேண்ட்டேஜ் போடப்பட்டு காயமே வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டது.

கைகாட்டிய கடைக்காரர்
முதல் ரவுண்ட் அடையாள அணி வகுப்பின்போது, சிவகுமார் உடனடியாக ராம்குமார்தான் குற்றவாளி என கை காட்டிவிட்டார். சுவாதியின் தந்தைக்குதான் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது.

எளிதாக இருந்த 2வது ரவுண்ட்
2வது ரவுண்டில் அடையாள அணிவகுப்பில் பங்கேற்க வைக்கப்பட்ட ராம்குமார் உள்ளிட்ட 10 பேருக்குமே சிவப்பு வண்ணத்தில் சட்டை அணிந்து நிறுத்தியுள்ளனர். இந்த ரவுண்டில் ராம்குமாரை, சுவாதி தந்தை சீக்கிரம் கண்டுபிடித்துவிட்டார்.

கதறிய தந்தை
மூன்றாவது சுற்று அணி வகுப்பின்போது, உணர்ச்சிவசப்பட்டவராய் காணப்பட்ட, சந்தானகோபால கிருஷ்ணன், ராம்குமார் கையை பிடித்தபடி, "எதுக்காக, என் மகள இப்படி செய்தாய்?".., "நீ என் மகள கொன்னுட்ட.. இப்போ நான் ஜெயிலுக்கு வந்து இதையெல்லாம் செஞ்சிகிட்டு இருக்கேன்" என்று கூறி சத்தம் போட்டு கதறி, அழுதுள்ளார். இதை பார்த்த ராம்குமாரின் கண்களிலும் கண்ணீர் கசிந்தது.

இவர்கள் ஏன்?
சுவாதியின் பின்னால் தொடர்ந்து சுற்றியது யார் என்று சந்தானகோபால கிருஷ்ணனிடம் கேட்கப் பட்டது. அதேபோல் கொலையை நேரில் பார்த்த பெட்டிக்கடை சிவக்குமாரிடம் கொலையாளியை அடையாளம் காட்ட கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன்படி அவர்கள் அடையாளம் காட்டினார்கள்.

நீதிபதி கருத்து
சுவாதி கொலைவழக்கு தொடர்பான அடையாள அணிவகுப்பு விவரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.உயர்நீதிமன்ற,உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. யார் யாரிடம் விசாரணை நடைபெற்றது என்பது பற்றியும் விசாரணை விவரங்களையும் வெளியிட முடியாது என, அணிவகுப்புக்கு பிறகு நீதிபதி சங்கர் கூறினார்.












Click it and Unblock the Notifications