தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சியா? பாமக ஆட்சியா ? வேல்முருகன் ஆவேசம்
சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வருவது அதிமுக ஆட்சியா? அல்லது பாமக ஆட்சி நடைபெற்று வருகிறாத என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ''பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு ஆகியோர் கூட்டாக உட்கார்ந்து, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் என்னையும், எனது சகோதரர்களையும், எனது கட்சியின் முன்னணி தலைவர்களையும் கொலை செய்ய திட்டமிட்டு வருகிறார்கள்.
என் தலைக்கு 25 லட்சம் விலை நிர்ணயம், என்னை கொலை செய்ய தமிழகம் முழுவதும் பாமக வினர் ஏவி விடப்பட்டு உள்ளனர். இதுவரை என்னை கொலை செய்ய நடைபெற்ற முயற்சிக்கும் நான் கொடுத்த புகாரின் பேரில் ராமதாஸ், அன்புமணி, காடுவெட்டி குரு என யாரையும் கைது செய்ய வில்லை.
முதல்வர் உத்தரவிட்டும் எனக்கு பாதுகாப்பளிக்கவில்லை. இதுவரையிலும் என் வீட்டிற்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பில்லை. நான் பயனிக்கிறபோதும் எனக்கு பாதுகாப்பு இல்லை. ஆனால் மாறாக, கடலூர் மாவட்டத்தில் ராமதாஸ் வந்தால் முன்னே ஒரு டிஎஸ்பி பின்னே ஒரு டிஎஸ்பி செல்கிறார்கள். குரு வந்தால் 500 போலீசார், அன்புமணி வந்தால் 500 போலீசார் வருகிறார்கள்.
சமீபத்தில் அன்புமணி மகள் திருமணத்திற்கு 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள். நான் கேட்கிறேன், அதிமுக அரசு நடக்கிறதா? பாமக அரசு நடக்கிறதா? தமிழ்நாட்டு காவல்துறையினர் தமிழ்நாட்டு வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறார்களா? அல்லது ராமதாஸ், அன்புமணி, குரு வீட்டில் சம்பளம் வாங்குகிறார்களா? என்று தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் எனக்கு தெரியப்படுத்த வேண்டும்.
எங்கள் உயிரை பாதுகாத்துக்கொள்ள, நாங்கள் பொதுக்குழுவில் கலந்து பேசி, உயர்நீதிமன்றத்தை உச்சநீதிமன்றத்தை நாடுவோம்'' என்று ஆவேசமாக கூறினார்.