ஜல்லிக்கட்டு அரசியல் தோலுரிப்பு.. வைரலாகிறது நாடி நரம்பை முறுக்கேற்றும் 'ஹிப்ஹாப் தமிழா' ஆல்பம்!
சென்னை: ஜல்லிக்கட்டை ஒழித்து கட்டுவதன் பின்னணியிலுள்ள சர்வதேச அரசியலை, தோலுரிக்கும் வகையில் வெளியாகியுள்ளது 'ஹிப்ஹாப் தமிழா'வின் டக்கரு, டக்கரு வீடியோ ஆல்பம்.
யூ டியூப் வீடியோ பாடல்கள் மூலம் உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கு அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி. இவர் நேற்று இந்த புதிய வீடியோ ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். இன்று மதியம் 2.30 மணிவரை ஒன்றேகால் லட்சம் ரசிகர்கள் இதை பார்த்து தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
சமூக காரணிகளை முன்வைத்து மேற்கத்திய பாணியில் இசை ஆல்பம் வெளியிடுவதில் புகழ்பெற்ற ஹிப்ஹாப் குழு, இம்முறையும், பெரிய விஷயத்தை கையில் எடுத்துள்ளது. அதுதான் ஜல்லிக்கட்டு அரசியல்.

முதலில் காட்சிகள்
ஜல்லிக்கட்டை ஒழிப்பதன் பின்னணியில் உள்ள பன்னாட்டு அரசியல் என்ன, வணிக நிறுவனங்கள் நோக்கம் என்ன என்பதை திரைப்பட பாணியில் சில நிமிட காட்சிகள் மூலம் காண்பித்துவிட்டு, நடுவே பாடல் இசைக்கப்படுகிறது.

அனுபவங்கள்
இதன்பிறகு, ஜல்லிக்கட்டு தொடர்பான ஆய்வாளர்கள், விவசாயிகள், மாடு வளர்ப்போரின் கருத்துக்களும் நடுவே காண்பிக்கப்படுகிறது. காளைகளை மிகவும் பாசமாக வளர்ப்பதாக மாடு வளர்ப்போர் கூறுகிறார்கள். காளை மாடுகளுடன் சிறு வயது முதல் காலத்தை செலவிட்ட ஒருவரோ அதை தங்கள் குல சாமியாக பார்ப்பதாக கூறி நெஞ்சை நெகிழ செய்கிறார்.

துரத்தும் கேள்விகள்
காளை மாட்டின் முகத்தை தடவி மூக்கில் முகர்ந்து பார்த்தால் கோயில் கோபுரத்தின் வாசம் வரும் என்று செய்தும் காண்பிக்கிறார் அந்த காளை வளர்ப்பாளர். இப்படியெல்லாம் பாதுகாக்கும் காளைகளை யாராவது துன்புறுத்த விடுவோமா என்று அவர் கேட்கும் கேள்வியில் ஆயிரம் நியாயங்கள் உள்ளது.
உள்நாட்டிலேயே அகதி
உனது அடையாளத்தை நீ இழந்தால், உள் நாட்டிலேயே நீ அகதியாவாய் என்று தமிழர்களை எச்சரித்து முடிகிறது இந்த வீடியோ. இந்த பாடல் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை சமூக தளங்களில் பார்க்க முடிகிறது. பேஸ்புக்கில் இந்திய அளவில் டாப் டிரெண்டாக இப்பாடல் ஓடிக்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications