காஷ்மீர் துப்பாக்கிச் சண்டையில் சென்னை ராணுவ அதிகாரி பலி...
சென்னை: நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலத்தில் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்குமிடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் பலியான இரண்டு ராணுவ வீரர்களில் ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர். பெயர் மேஜர் முகுந்த் வரதராஜன்.
சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவர் மேஜர் முகுந்த் வரதராஜன் (31). ராணுவ மேஜரான முகுந்திற்கு கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவரது மனைவி பெயர் இந்து. இவர்களுக்கு 3 வயதான அர்ஷிதா என்ற மகள் இருக்கிறாள். முகுந்தின் மனவி மற்றும் மகள் பெங்களூரில் உள்ள ராணுவ குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

ஆவடி அருகேயுள்ள பருத்திப்பட்டு கிராமத்தை சொந்த ஊராகக் கொண்ட முகுந்தின் தந்தை வரதராஜன் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. தாயார் பெயர் கீதா. இவர்கள் இருவரும் சென்னை கிழக்குத் தாம்பரத்தில் வசித்து வருகின்றனர். முகுந்துக்கு சுவேதா, நித்யா என்ற இரு சகோதரிகள் உள்ளனர். அவர்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது.
கல்வி...
கிழக்கு தாம்பரத்தில் உள்ள சங்கரா கல்லூரியில் பி.காம் படித்த முகுந்த், அதனைத் தொடர்ந்து சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் ஊடக துறையில் பி.ஜி.டிப்ளமோ படித்தார்.
44வது ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவு...
அதன்பிறகு சென்னையில் உள்ள ஆபீசர்ஸ் பயிற்சி அகாடமியில் சேர்ந்து ராணுவ மேஜராக 44-வது ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவில் சேர்ந்தார்.
ஐநா அமைதிப்படை...
2012-ம் ஆண்டு லெபனானில் ஐக்கிய நாடுகள் சபை அமைதிப்படையில் பணியாற்றிய முகுந்த், அதன் பின்னர் காஷ்மீரில் ராணுவ மேஜராக பணியாற்றி வந்தார்.
ஆறுதல்...
முகுந்த் நாட்டுக்காக வீரமரணம் அடைந்தது குறித்து கேள்விப்பட்ட முகுந்தின் தந்தை வரதராஜன், தாயார் கீதா ஆகியோருக்கு உறவினர்கள், குடியிருப்பு வாசிகள் ஆறுதல் கூறினார்கள்.
ராணுவ மரியாதையுடன்...
விமானம் மூலம் இன்று இரவு சென்னை கொண்டுவரப்பட உள்ள முகுந்தின் உடல் நாளை (திங்கட்கிழமை) ராணுவ மரியாதையுடன் குரோம்பேட்டையில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications