கமல்ஹாசனை எப்படி மிரட்டலாம்... வரிந்து கட்டி களம் இறங்கிய தமிழ்த் திரையுலகம்
அரசை விமர்சித்துப் பேசிய நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழக அமைச்சர்கள் அடுத்தடுத்து மிரட்டல் விடுத்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் சினிமா உலகத்தினர் பரபரப்புக் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை: தமிழக அரசை விமர்சித்து பேசிய நடிகர் கமல்ஹாசனுக்கு அமைச்சர்கள் அடுத்தடுத்து மிரட்டல் விடுத்த நிலையில், கமலுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் சினிமா பிரபலங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசன்," தமிழகத்தில் எல்லா துறையிலும் ஊழல் நடக்கிறது என கூறியிருந்தார். இதையடுத்து, 'கமல் மீது வழக்கு தொடரப்படும்', 'அவரை கைது செய்ய வேண்டும்', 'துணிச்சல் இருந்தால் அரசியலுக்கு வந்து பேசட்டும்' என்று அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, அன்பழகன், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் அடுத்தடுத்து கமலை கடுமையாக விமர்சித்து மிரட்டும் நோக்கில் கருத்துத் தெரிவித்தனர்.
இது தொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, 'கமலை மிரட்டும் அமைச்சர்கள், ஆதாரத்துடன் ஊழல் புகார் கூறிய என் மீது வழக்கு தொடர்வார்களா?' என்று எதிர் கேள்வி எழுப்பியிருந்தார்.
மக்களை பிரதிபலித்த கமல்
இந்நிலையில் கமல் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து திரையுலகினர் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, 'மக்களின் கருத்துகளைத்தான் கமல்ஹாசன் பிரதிபலித்துள்ளார். ஜனநாயக முறைப்படி அவர் கருத்து தெரிவித்துள்ளார்' என்றார்.
முதுகை காட்டிய மந்திரிகள்
நடிகை கஸ்தூரி கூறும்போது, 'நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய மக்கள் பிரச்சனைகள் நிறைய இருக்கும்போது கமல்ஹாசனை மட்டும் குறிவைத்து தாக்குவது ஏன்? ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது மந்திரிகளின் முகத்தை விடமுதுகைத்தான் பார்க்க முடிந்தது.
வம்பா போச்சு
ஆனால் இப்போது மட்டும் கருத்து சொல்லும் நடிகரை காரசாரமாக திட்டுவது ஏன்? இதென்னடா வம்பா போச்சு. ஒரு நடிகரை எதுவுமே பேசாமல் இருக்கிறாரே என திட்டுகிறார்கள். இன்னொரு நடிகரை எல்லாவற்றுக்கும் பேசுகிறாரே என திட்டுகிறார்கள்' என்றார்.
ஸ்ட்ராங் மைன்ட் கமல்
'கமலை அமைச்சர்கள் மிரட்டுவது சிறுபிள்ளைத்தனமானது. மக்கள் பிரச்சனைகளை அவர்கள் பார்க்க வேண்டும்' என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். ரஜினி மகள் சவுந்தர்யா கமல் மீதான விமர்சன கருத்துக்கள் குறித்து, 'கமல் ஸ்ட்ராங் மைன்ட் உள்ளவர். எதையும் தெளிவாகத்தான் பேசுவார். அவர் எங்கள் குடும்ப நண்பர். அதற்கும் மேலாக அப்பாவின் நீண்ட நாள் நண்பர். எப்போதும் நலமாக இருக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.