சம்பள பாக்கி... தற்கொலைக்கு முயற்சித்த துணை நடிகர் அரசு
சென்னை: தமிழ் சினிமாவில் துணை நடிகராக சில படங்களில் நடித்துள்ள இளவரசன் என்கிற அரசு எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
29 வயதாகும் இளவரசன் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', 'சிறுத்தை', 'சகுனி' உள்ளிட்டப் படங்களில் துணை நடிகராக நடித்தவர். இவர் நடித்த சில படங்களுக்கு தயாரிப்பாளர்கள் ஊதியம் தராத காரணத்தால் குடும்பம் நடத்த அவதிப்படுவதாக தனது தற்கொலை கடிதத்தில் எழுதியுள்ளார்.
நடிகர் சங்க செயலாளரும், நடிகருமான விஷாலுக்கு இளவரசன் எழுதியுள்ள தற்கொலைக் கடிதத்தில், பல முறை தனது பிரச்னைகளை விஷாலுக்கு தெரிவிக்க முயற்சித்ததாகவும், தன்னை போன்று குடும்பம் நடத்தவே கஷ்டப்படும் துணை நடிகர்களுக்கு விஷால் உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
எம்.கே.பி நகரில் மனைவி சசிகலா, மகன் சிவாவுடன் வசித்து வந்தார் இளவரசன். சினிமாவில் நடித்தும் தயாரிப்பாளர்களிடம் சம்பளத்தை வாங்க முடியாததை காரணமாக கூறி அவரது மனைவி அடிக்கடி சண்டை போடுவாராம்.
சண்டை பெரிதாகவே அவரது மனைவி பிரிந்து சென்று விட்டதோடு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதை தாங்கிக் கொள்ள முடியாமல் இளவரசன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரது பக்கத்துவீட்டைச் சேர்ந்த நண்பர் ஓடி வந்து இளவரசனை சென்னையில் உள்ள ஸ்டேன்லி மருத்துவமனையில் அனுப்பிவைத்துவிட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் வந்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஹீரோ, ஹீரோயின்களுக்கு சிங்கிள் பேமெண்ட் செக் என கோடிகளில் கொட்டிக்கொடுக்கும் தயாரிப்பாளர்கள் துணை நடிகர்கள், பாடல் ஆசிரியர்களுக்கு சம்பளபாக்கி வைத்து அவர்களை வதைப்பது ஏன் என்று தெரியவில்லை. சம்பள பாக்கியால் சிகிச்சை செய்ய முடியாமல் பாடல் ஆசிரியர் முத்துக்குமார் உயிரிழந்த சோகம் மறைவதற்கு முன்பு தற்போது துணை நடிகர் ஒருவர் தற்கொலை செய்ய முயற்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.