சிலை கடத்தல் வழக்கில் திரைப்பட இயக்குநர் வி.சேகர் கைது...கல்லூரி மாணவர் உள்பட 12 பேருக்கு வலை வீச்சு
சென்னை : திருடப்பட்ட கோவில் சிலைகளை கடத்தி வீட்டில் வைத்து பேரம் பேசிய புகாரில் பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநர் வி.சேகர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் திரைத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சென்னை மேற்கு மாம்பலத்திலிருந்து, ரூ.80 கோடி மதிப்புள்ள 8 பஞ்சலோக சிலைகளை கடத்தி வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தனலிங்கம் என்பவரை கைது செய்தனர்.

இவர், திரைப்படத் துறையில் தயாரிப்பு மேலாளராக பணியாற்றி வந்தார். இவரிடம் போலீசார் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தில், திருடப்பட்ட சிலைகளுக்கு இயக்குநர் வி.சேகர்
வீட்டில் வைத்து பேரம் பேசியதாக அவர் கூறினார்.
இதனையடுத்து இந்த வழக்கில் இயக்குநர் வி.சேகரையும் சேர்க்க போலீசார் முடிவு செய்தனர். இந்நிலையில், வி.சேகரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வழக்கில் கல்லூரி மாணவர் விஜயராகவன் உள்பட மேலும் 12 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
குடும்பப்பாங்கான படங்களை இயக்கி பெயர் பெற்றவர் வி.சேகர். இவர் ‘பொண்டாட்டி சொன்னா கேக்கணும்', ‘ஒண்ணா இருக்க கத்துக்கணும்', ‘வரவு எட்டணா செலவு பத்தணா', ‘பொங்கலோ பொங்கல்' உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர். இந்நிலையில் வி.சேகர் சிலைக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் திரைத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications