தமிழக மீனவர்கள் பிரச்சனை..மத்திய அரசைக் கண்டித்து ரமேஸ்வரத்தில் ஜூலை 1-ல் ஆர்ப்பாட்டம்- வேல்முருகன்
சென்னை: தமிழக மீனவர்கள் மீதான இலங்கையின் தாக்குதலைத் தடுக்காத மத்திய அரசைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் ஜூலை 1-ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்,.
தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் வாடிக்கையாகிவிட்டது.
இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் நாள்தோறும் தாக்கப்படுவதும் கொத்து கொத்தாக கைது செய்யப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. ஆண்டாண்டு காலமாக மீன்பிடித்த பாரம்பரியமான பகுதியில் மீன் பிடித்தால் எல்லை தாண்டியதாக கூறி தாக்குதல் நடத்தி கைது செய்கிறது.

அத்துமீறலுக்கு முடிவே இல்லையா?
சிங்களக் கடற்படை. இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறலுக்கு முடிவே இல்லையா? என்ற கதறல் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்காக தனி அமைச்சகமே அமைப்போம். மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுப்போம் என்றெல்லாம் கூறிய பாரதிய ஜனதாவின் மத்திய அரசோ, இரண்டரை ஆண்டுகாலமாக இப்பேரவலத்தைத் தட்டிக்கேட்காத, தடுக்காத திராணியற்ற அரசாகத்தான் இருக்கிறது.

மாற்றாந்தாய் மனப்பான்மை
மீனவர்கள் கைது செய்யப்படுவதும் அதைத் தடுக்க தமிழக அரசு கடிதம் எழுதுவதும் நாளாந்த நிலையாகிப் போய்விட்டது. ஆனால் இந்தத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க விரும்பாத அரசாக, தமிழன் தானே சாகட்டும் என்று மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது மத்திய அரசு. இதே குஜராத் மீனவர்கள் கைது செய்யப்படும் போது வெளிநாட்டுப் பயணத்தில் இருந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமருடன் ஒப்பந்தமே போடுகிறார் பிரதமர் மோடிஆனால் தமிழக மீனவகள் நாள்தோறும் செத்து செத்து பிழைத்துக் கொண்டிருந்தாலும் சிங்களத்து சிறைகளில் சித்ரவதைகளை அனுபவித்தாலும் கிஞ்சிற்றும் கவலைப்படமாட்டேன் என சபதமெடுத்துக் கொண்டிருக்கிறார்.

கட்சத் தீவை மீட்பதே தீர்வு
தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்ட கச்சத்தீவை மீட்பது ஒன்றே உறுதியான ஒற்றைத் தீர்வு என்பதே ஒட்டுமொத்த தமிழகத்தின் குரல். இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் பச்சைத் துரோகத்தால் தமிழகத்தின் ஒப்புதலின்றி கச்சத்தீவு கொடுக்கப்பட்டதால் சிங்களத்தின் துப்பாக்கிகளுக்கு 800 தமிழக மீனவர்கள் பலியாகிப் போயுள்ளனர். இப்போதும் அதே சித்ரவதை, கைது, சிறைபிடிப்பு, படகுகள் பறிமுதல் தொடர் கதையாகிக் கொண்டிருக்கிறது.

மத்திய அரசு-நடவடிக்கை இல்லை
கடந்த 2 ஆண்டுகாலத்துக்கும் மேலாக மீனவர்களின் ஒற்றை வாழ்வாதாரமான நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் பறிக்கப்பட்டு இலங்கைக் கடற்கரையோரங்களில் சிதிலமடைந்து போயுள்ளன. இவற்றை மீட்டுத் தருவதற்கும் ஒரு நடவடிக்கையைக் கூட முன்னெடுக்காத அரசாகத்தான் மத்திய அரசு இருந்து வருகிறது.

கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலையும் கைது நடவடிக்கைகளையும் மத்திய அரசு தடுக்கவில்லை. மேலும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த மத்திய அரசைக் கண்டித்தும் தமிழக மீனவர்கள் வாழ்வாதாரமான பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்கும் உரிமையை நிலைநாட்டவும், இதற்கான ஒற்றை தீர்வாக கச்சத்தீவை திரும்பப் பெற வலியுறுத்தியும் ராமேஸ்வரம் நகரில் வரும் ஜூலை 1-ந் தேதி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது நம் வாழ்வுரிமைக்கான போராட்டம்! இது நம் வாழ்வாதாரத்தை மீட்பதற்கான போராட்டம்! இந்தப் போராட்டத்தில் மீனவப் பெருங்குடிமக்களும் கட்சி எல்லைக் கடந்து தமிழ் மக்களும் பெருந்திரளாக கலந்து கண்டு உரிமைக் குரல் எழுப்புவோம்! வாருங்கள் என அன்புடன் அழைக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications