கெயில் விவகாரம்: ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அரசு அப்பீல்
கேரள மாநிலம், கொச்சியிலிருந்து கர்நாடக மாநிலம் மங்களூருக்கு எரிவாயு குழாய் பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக கெயில் நிறுவனம், தமிழகத்தில், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கோவை ஆகிய 7 மாவட்டங்களிலும், விவசாய நிலத்தில் எரிவாயு குழாய் பாதை அமைக்கும் திட்டத்தை அறிவித்தது.
இதற்கு தமிழக அரசு தடைவிதித்ததையடுத்து, கெயில் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில், விவசாய நிலத்தில் எரிவாயு குழாய் அமைப்பதற்கு அனுமதிக்க வேண்டும் எனக்கூறி மனுத்தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் ஆணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ''விவசாயிகளையும், விவசாய நிலங்களையும் பாதிக்காமல் எரிவாயு குழாய்களை நெடுஞ்சாலை ஓரம் பதிக்க உத்தரவிட வேண்டும்'' எனக் கூறப்பட்டுள்ளது.