மக்கள் நலக்கூட்டணியா? சிக்கல் நலக்கூட்டணியா? சட்டசபையில் ருசிகர விவாதம்
சென்னை: சட்டசபை என்றலே கார சார விவாதமும், வெளிநடப்புகளும் நடைபெற்று வரும் நிலையில் சில சமயங்களில் ருசிகரமான விவாதங்களும் நடைபெறுவது உண்டு. நேற்றைய விவாதத்தின் போது மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளைக் கொண்ட மக்கள் நலக் கூட்டணியை சிக்கல் நலக் கூட்டணி என்று விமர்சித்ததால் சட்டசபையில் விவாதம் எழுந்தது.
சட்ட சபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசியபோது, "புறப்பட்ட இடத்திலேயே தரைதட்டி நிற்கும் சிக்கல் நல கூட்டணித் தக்கைகள்' என்று விமர்சித்தார்.
இதற்கு பதிலளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், "மக்கள் நலக் கூட்டணியில் எந்தச் சிக்கலும் இல்லை' என்றார்.
அப்போது குறுக்கிட்ட ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நலக் கூட்டணியில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதில்தான் சிக்கல் உள்ளது. அதைத்தான் சிக்கல் நலக் கூட்டணி என்று அதிமுக உறுப்பினர் குறிப்பிட்டதாக தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக மார்க்சிஸ்ட் உறுப்பினர் அ.சௌந்தரராஜன், முதல்வர் யார் என்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. மக்கள் நலக் கூட்டணியில் இருந்துதான் முதல்வர் வருவார் என்று கூறினார்.
அப்போது எழுந்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அதுதான் யார் எனக் கேட்கிறோம். அதனை பகிரங்கமாகச் சொல்லுங்கள் என்று கேட்டார்.
இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆறுமுகம், மக்கள் நலக் கூட்டணியில் எந்தச் சிக்கலும் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் மூலம் தேர்வு செய்யப்படுபவர் முதல்வராக வருவார் என்று கூறினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் பாலகிருஷ்ணன், முதல்வர் யார் என்று கேள்வி எழுப்புவதன் மூலம், மக்கள் நலக் கூட்டணியை அவை முன்னவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது என்று கூறினார்.
இப்படி மக்கள் நலக்கூட்டணியை வைத்து சற்று நேரம் சட்டசபையில் விவாதம் நடைபெற்றது.