தமிழக சட்டசபை மீண்டும் 16ம் தேதி கூடுகிறது - சபாநாயகர் தனபால் அறிவிப்பு
சென்னை: தமிழக சட்டசபை மீண்டும் 16ம் தேதி கூடும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். சட்டசபையின் இன்றைய கூட்டம் நிறைவு பெற்றதை இதனை தனபால் அறிவித்தார்.
தமிழகத்தில் 15வது சட்டசபைக்கான தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் புதிய அமைச்சரவை மே 23ம் தேதி பதவியேற்றது.
15வது சட்டசபை கடந்த 25ம் தேதி கூடியது. பேரவையின் தற்காலிக தலைவர் செம்மலை முன்னிலையில், முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட 230 பேரும் எம்எல்ஏக்களாக பதவியேற்றனர். பின்னர், பேரவைத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் தொடர்பான அறிவிப்பை செம்மலை வெளியிட்டார். இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30ம் தேதி தொடங்கியது.
இதற்கிடையில், அதிமுக சார்பில் பேரவைத் தலைவர் வேட்பாளராக பி.தனபால், துணைத் தலைவர் வேட்பாளராக பொள்ளாச்சி ஜெயராமன் அறிவிக்கப்பட்டனர்.
இருவரும் வேட்புமனுக்களை வியாழக்கிழமையன்று தாக்கல் செய்தனர். அப்போது அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி கே.பழனிசாமி, செல்லூர் கே.ராஜூ, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உடன் இருந்தனர்.
பகல் 12 மணி வரை வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால், சட்டசபை தலைவராக பி.தனபாலும், துணைத் தலைவராக பொள்ளாச்சி ஜெயராமனும் போட்டியின்றி தேர்வாகினர்.
இதனைத் தொடர்ந்து இன்று கூடிய சட்டசபை கூட்டத்தில் சபாநாயகராக தனபாலும், துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமனும் பதவியேற்றுக்கொண்டனர்.
சட்டசபை மரபுப்படி அவை முன்னர் ஓ.பன்னீர் செல்வமும், எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலிலும் சபாநாயகரை அவரது இருக்கையில் அமரவைத்தனர்.
சபாநாயகருக்கும், துணை சபாநாயகருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தி பேசினார்.
புதிதாக பொறுப்பேற்ற சபாநாயகர் தனபால் ஏற்புரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது. சட்டசபை மேலும் 16ம் தேதி கூடும் என்று சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.