Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரயில்வே பட்ஜெட்: தென் மாவட்டங்கள் ஜொலிக்குமா? – இன்று தெரியும்!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: மத்திய அரசு இன்று தாக்கல் செய்யும் ரயில்வே நிதிநிலை அறிக்கையை தெந்தமிழக மாவட்ட மக்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நீண்டகாலமாக கிடப்பில் உள்ள திட்டங்களுக்கு 'விமோசனம்' கிடைக்குமா என்பதுதான் அவர்களது எதிர்பார்ப்பு.

பொதுவாக ரயில்வே நிதி நிலை அறிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், பயணிகள் சங்கங்கள், வியாபாரிகள் சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கோரிக்கையின் அடிப்படையில் புதிய ரயில்கள் இயக்கவும், ரயில் நீட்டிப்பு செய்தல், ரயில்கள் இயங்கும் சேவைகளை அதிகரித்து இயக்குதல் போன்ற அறிவிப்புகள் வெளியிடப்படும்.

Tamil Nadu expects some of the new schemes in Railway budget – 2015…

பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் ரயில்வே கால அட்டவணை மாநாடு நடைபெற்றது. இந்த ஆண்டு நடைபெற்ற இந்த மாநாட்டில் அனைத்து ரயில்வே மண்டலங்களிலிருந்தும் ரயில்வே அதிகாரிகள் கலந்து ரயில்வே பட்ஜெட் புதிய ரயிலுக்கான அறிவிப்புகள், தற்போது இயங்கி கொண்டிருக்கும் ரயில்களின் நீட்டிப்பு, ரயில்களின் சேவைகள் அதிகரித்தல் போன்ற பல்வேறு திட்டங்கள் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டது.

ஒவ்வொரு மண்டலத்திலிருந்து திட்ட கருத்துருவை அடுத்த ரயில்வே மண்டலத்தை சார்ந்த ரயில் கட்டுப்பாடு மற்றும் இயக்க பிரிவு அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விவாதித்து ரயில் பெட்டிகளின், ரயில் எஞ்சின்களின் இருப்பு, ரயில்கள் இயக்கப்படும் வழித்தடம் மற்றும் காலம், பராமரிப்பு நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பட்டியல் தயார் செய்யப்பட்டது

கன்னியாகுமரி மாவட்ட பயணிகளின் வசதிக்காக புதிய ரயில்கள் இயக்கவும் , ரயில் நீட்டிப்புக்கும், திருவனந்தபுரம் கோட்டம் தனது திட்ட கருத்துருவை தெற்கு ரயில்வே தலைமையகத்துக்கு கடந்த டிசம்பர் மாதம் சமர்ப்பித்து விட்டது.

இந்த முறையாவது திருவனந்தபுரம் கோட்டம் மற்றும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் கன்னியாகுமரி மாவட்ட பயணிகளுக்கு பயன்படும் விதத்தில் ரயில்கள் இயக்க திட்ட கருத்துருவில் இணைத்து ரயில்வே நிதி நிலை அறிக்கை அறிவிப்பில் வெளியாகும் என்று எதிர்பார்க்கின்றனர்.

கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ரயில்களை இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

1. திருச்சி - திருநெல்வேலி இன்டர்சிட்டி ரயிலை திருவனந்தபுரம் நீட்டிப்பு செய்ய கோரிக்கை

குமரி மாவட்டத்திலிருந்து தமிழகத்தின் திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருச்சி போன்ற பல்வேறு நகரங்களுக்கு காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை இடைப்பட்ட சுமார் 10 மணி நேரத்தில் தினசரி ரயில் வசதி இல்லை.

இதைபோல் மறுமார்க்கம் மதுரை, திருச்சியிலிருந்து அதிகாலையிலிருந்து மதியம் வரை எந்த ஒரு தினசரி ரயில் வசதியும் இல்லை என்பது குறிப்பிடதக்கது.

திருச்சியிலிருந்து மதுரை வழியாக திருநெல்வேலிக்கு இன்டர்சிட்டி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை; திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.

2. கன்னியாகுமரி - மங்களுர் இரவு நேர ரயில் வரை இயக்க கோரிக்கை

கன்னியாகுமரியிலிருந்து மங்களுருக்கு தினசரி இரவு நேர ரயில் வசதி இல்லை. இந்த தடத்தில் தினசரி இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என்பது 20 ஆண்டுகால கோரிக்கை ஆகும்.

இதற்கு திருவனந்தபுரம் - மங்களுர் இரவு நேர ரயிலை கன்னியாகுமரிக்கு நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். அல்லது கன்னியாகுமரியிலிருந்து மங்களுருக்கு புதிய தினசரி ரயில் அறிவித்து இயக்க வேண்டும என்று பயணிகள் ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

3. கொச்சுவெலி - வேளாங்கண்ணி தடத்தில் தினசரி ரயில் இயக்க கோரிக்கை (வழி நாகர்கோவில்)

கிறிஸ்தவர்களின் புனித இடமான வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு திருவனந்தபுரம்,கொல்லம் கன்னியாகுமரி, நெல்லை மாவட்டத்திலிருந்து அதிகபடியான கிறிஸ்தவ மற்றும் பிற மதத்தினரும் வேளாங்கண்ணி மாதாவை தரிசிக்க தினசரி செல்கின்றனர்.

பக்தர்களின் வசதிக்காக கொச்சுவேலியிலிருந்து நாகர்கோவில் , திருநெல்வேலி, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகபட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு தினசரி ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. கன்னியாகுமரி - நிஜாமுதீன் திருக்குறள் ரயிலை தினசரி ரயிலாக மாற்றி இயக்கம்.

தமிழகத்திலிருந்து இந்தியாவின் தலைநகர் டெல்லிக்கு போதிய ரயில்வசதி இல்லை என்றும் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே கோரிக்கை இருந்து வருகிறது.

கன்னியாகுமரியிலிருந்து திருநெல்வேலி,மதுரை, திருச்சி, சென்னை, விஜயவாடா, நாக்பூர், போபால் வழியாக இந்தியாவின் தலைநகரான டெல்லிக்கு அதாவது நிசாமுதீன்க்கு 12641/12642 எண் கொண்ட வாரத்துக்கு இரண்டு நாள் ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும்.

5. கன்னியாகுமரி - புதுச்சேரி வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்கம்

குமரி மாவட்டத்திலிருந்து முதல் முறையாக காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம், மைலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், பண்ருட்டி போன்ற பகுதிகளை ரயில் மார்க்கம் நேரடியாக இணைக்கு வாராந்திர ரயிலான கன்னியாகுமரி - புதுச்சேரி ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும்.

6. கன்னியாகுமரி - ஐதராபாத்(காச்சுகுடா) வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக மாற்றி இயக்கம்

நாகர்கோவிலிருந்து ஆந்திராவின் தலைநகரான ஹைதராபாத்கு வாராந்திர ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும்.

7. நாகர்கோவில் -சென்னை முழுவதும் குளிர்சாதன ரயில்:

தென்மாவட்ட பயணிகள் தற்போது இயக்கப்படும் ரயில்களில் சென்னை சென்றுவர செல்லமுன்பதிவு பயணச்சீட்டு கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். அதிலும் குளிர்சாதன பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் முன்பதிவு இருக்கைகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஆகவே நாகர்கோவிலிருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூர்க்கு தினசரி செல்லதக்கவகையில் முழுவதும் குளிர்சாதனவசதி பெட்டிகள் மட்டும் கொண்ட ரயில் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

8. எர்ணாகுளம் - மும்பை 12224/12223 துரந்தோ ரயிலை குளிர்சாதன சூப்பர்பாஸ்டு ரயிலாக மாற்றி திருநெல்வேலி வரை நீட்டிக்க கோரிக்கை

எர்ணாகுளத்திலிருந்து மும்பைக்கு வாரத்துக்கு இரண்டுநாள் செல்லதக்க வகையில் துரந்தோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை முழுவதும் குளிர்சாதன பெட்டிகள் மட்டும் கொண்ட சூப்பர்பாஸ்ட் ரயிலாக மாற்றி திருவனந்தபுரம், நாகர்கோவில் வழியாக திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.

9. நாகர்கோவிலிருந்து சென்னைக்கு செல்லும் இரண்டு வாராந்திர ரயில்களையும் தினசரி ரயில்களாக மாற்றி இயக்கம்

குமரி மாவட்ட பயணிகள் தங்கள் மாநிலத்தின் தலைநகரான சென்னைக்கு செல்ல போதிய ரயில்கள் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது இயங்கிகொண்டிருக்கிற இரண்டு இரவு நேர ரயில்களும் தினசரி காத்திருப்போர் பட்டியலுடனே இயங்கி வருகிறது.

ஆகவே தற்போது இயக்கப்பட்டுவரும் சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வாராந்திர ரயில் மற்றும் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் வாராந்திர ரயிலையும் தினசரி ரயிலாக இயக்க வேண்டும்.

சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் ரயிலின் வழித்தடத்தை மாற்றி மதுரை, கரூர், நாமக்கல், சேலம் வழியாக காலையில் சென்னை சென்ட்ரல் செல்லதக்க வகையில் காலஅட்டவணையையும் மாற்றி இயக்க வேண்டும்.

மதுரை - சென்னை 22205/06 துரந்தோ ரயிலை முழுவதும் குளிர்சாதன சூப்பர்பாஸ்டு ரயிலாக மாற்றி திருவனந்தபுரம் வரை நீட்டித்து இயக்குதல்

மதுரையிலிருந்து சென்னைக்கு வாரத்துக்கு இரண்டுநாள் துரந்தோ இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் முழுவதும் குளிர்சாதன பெட்டிகள் கொண்ட ரயில் ஆகும். இந்த ரயிலை முழுவதும் குளிர்சாதன சூப்பர்பாஸ்ட் ரயிலாக மாற்றி நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.

10.சென்னையிலிருந்து -செங்கோட்டை க்கு ஒரே ஒரு ரயில் மட்டுமே தினசரி இயக்கப்பட்டு வருகிறது.

விருதுநகர்-முதல் செங்கோட்டை வரை இரண்டு பாராளுமன்றத் தொகுதியை உள்ளடக்கிய சுமார் 6 லட்சம் மக்கள் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட நகரங்களும்,கிராமங்களும்,முக்கிய சுற்றுலாத் தளங்களான குற்றாலம்,ஆன்மீக பூமியான சங்கரன் கோவில்,ஸ்ரீவில்லிபுத்தூர்,தென்காசி,குற்றாலம்,இந்த வழித்தடத்தில் உள்ளது.

அதுமட்டுமின்றி ஆண்டுக்கு சுமார் 30 இலட்சம் ஐயப்ப பக்தர்கள்,குற்றாலத்திற்கு வரும் 40 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் எனஆண்டு முழுவதும் கற்பக விருட்சமாக ரயில்வேக்கு வருவாயை அள்ளித்தரும் தடமான இந்த தடத்தில் இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம் தொடங்கப்பட்டதில் இருந்தே படுக்கை வசதி இல்லாமல் காத்திருப்போர் பட்டியல் இன்று வரை தொடர்கிறது.

இந்தத் தடத்தில் சென்னை -செங்கோட்டைக்கு கூடுதல் ரயில் சேவை லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்த போது இடைக்கால மத்திய பட்ஜெட்டில் அறிவித்தார்.

ஆனால் அந்த அறிவிப்பும் அறிவிப்போடு நின்றுப் போனது.இந்த தடத்தில் சிறப்பு ரயில்களும் கிடையாது.வரலாற்று சிறப்பு மிக்க இந்தத் தடத்தில் கூடுதல் தினசரி ரயில்வசதி கிடைக்க வேண்டும் என்பது பல இலட்சம் மக்களின் நீண்டநாள் கோரிக்கை ஆகும்.

11.செங்கோட்டை -கொல்லம் இடையே மலைகளை குடைந்து மனித சக்திகளால் 1880 ஆண்டு மீட்டர் கேஜ் ரயில்பாதை ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்டது.காலங்கள் வேகமாக சுழல மீட்டர் கேஜ் பாதைகள அனைத்தும் அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டன.

அதில் இந்ததடமும் ஓன்று .2010 ஆண்டு இந்தப் பாதையில் செங்கோட்டை முதல் புனலூர் வரை ஓடிக் கொண்டிருந்த மீட்டர் கேஜ் ரயில் நிறுத்தப்பட்டு அகல ரயில்பாதை அமைக்கும் பணித் தொடங்கியது.2013.ல் பணிகள் முடிக்கப்பட்டு ரயில் போக்கு வரத்து தொடங்கும் என்றனர்.

ஆனால் போதிய நிதிகளை ஒதுக்காமல் 40 சதவிகிதப் பணிகள் மட்டும் இந்த பாதையில் முடிக்கப்பட்டுள்ளது.இந்தாண்டு மத்திய பட்ஜெட்டில் இந்த திட்டத்திற்கு கூடுதல் நிதியை ரயில்வே ஒதுக்கும் என்று நம்பப்படுகிறது.

தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் வசந்தி முருகேசன் நம்மிடம் கூறும் போது, இந்த திட்டம் குறித்து நான் நாடாளு மன்றத்தில் இரண்டு முறை பேசி விட்டேன்.மேலும் ரயில்வே அமைச்சரிடமும் பேசினேன்.

இந்த முறை கண்டிப்பாக செங்கோட்டை- புனலூர் ரயில் பாதைப் பணியை விரைவாக முடிக்க வலியுறுத்துவேன்.2016க்குள் பணிகளை முடித்து ரயில்களை இயக்கிட முயற்சிகளை மேற்கொள்வேன்.மேலும் அனைத்து அதிமுக உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு இத்திட்டம் நிறைவேற பாடுபடுவேன்" என்றார்.

நாளையப் பொழுது ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்தின் தென்மாவட்டங்களை வளப்படுத்தும் திட்டங்களை தாங்கி அதிக அறிவிப்புக்கள் வருமா..இல்லை வடக்கு வாழ்கிறது..தெற்கு தேய்கிறது என்று சொல்வார்களே அதுப்போல் நடக்குமா..பொறுத்திருந்துப் பார்ப்போம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+