இது புது டைப்பா இருக்கே... மோடிக்கு "சூனியம்" வைத்ததாக அறந்தாங்கி 'அறிஞர்' கைது
பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அறந்தாங்கியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி கைது செய்யப்பட்டார்.
Recommended Video

புதுக்கோட்டை: காவிரி விவகாரத்தில் நமது கோரிக்கைகள் காதில் விழாத வகையில் பிரதமர் மோடிக்கு சூனியம் வைத்து விட்டதாக கூறி போராடிய அறந்தாங்கி விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதில் ஆளுங்கட்சி உண்ணாவிரதம், எதிர்க்கட்சிகள் பந்த், மாணவர்களின் போராட்டம், அரசியல் கட்சிகளின் மறியல்கள், தனிநபர்களின் போராட்டங்கள் என பல வடிவங்களில் எதிர்ப்புகள் பஞ்சமில்லாமல் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், அறந்தாங்கியை சேர்ந்த விவசாயி ஒருவர் காவிரி விவகாரத்தில், இதுவரை யாருமே சிந்திக்காத வகையில், தம் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள எருக்கலக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி அறிஞர். இவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அறந்தாங்கி - கீரமங்கலம் சாலையில் எருக்கலக்கோட்டை கடை வீதியில் ஒரு கடை வாசலில் பதாகை வைத்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனி நபராக உண்ணாவிரதம் தொடங்கினார்.
இந்த நிலையில் நமது கோரிக்கை எதுவும் மோடி காதுக்கு கேட்கவில்லை, அவருக்கு யாரோ சூனியம் வைத்துவிட்டார்கள். எனவேதான் நாம் கதறுவது அவருக்கு கேட்கவில்லை. அதனால் 4வது நாளான வெள்ளிக்கிழமை சுடுகாட்டில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்வதாக கூறினார்.
இதில், சுடுகாட்டிலிருந்து துர்தேவதைகளிடம் பேசி மோடிக்கு வைக்கப்பட்டுள்ள சூனியத்தை அகற்றி, நம் கோரிக்கைகளை மோடி காதுக்கு கொண்டு போகும் போராட்டம் நடத்த இருப்பதாகவும் அறிஞர் தெரிவித்தார். இந்த தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார் இன்று காலை அறிஞரை கைது செய்தனர்.
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!!! ஒருவேளை அறிஞர்-னு பேர் இருக்கிறதால இப்படி யோசிச்சிருப்பாரோ?












Click it and Unblock the Notifications