காவிரி: ஏப்.11ல் கடையடைப்பு - அன்புமணி தலைமையிலான விவசாய சங்க கூட்டத்தில் முடிவு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உழவர் அமைப்புகள் சார்பில் ஏப்ரல் 11ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 11ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அன்புமணி தலைமையில் நடைபெற்ற அனைத்து விவசாய சங்கங்களின் தலைவர்கள் நடத்திய கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காவிரி நதி நீர் விவகாரத்தில், கடந்த பிப்ரவரி 16ம் தேதி சுப்ரிம் கோர்ட் இறுதி தீர்ப்பை வழங்கியது. அதன் படி ஆறு வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என கெடு விதித்தது.
கெடு நேற்றுடன் முடிவடைந்ததும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. இதை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் கண்டித்துள்ளன. தமிழக அரசு தரப்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர திட்டமிடப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து, பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி எம்.பி. வீட்டில் இன்று காலை முதல் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து, வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
உச்சநீதிமன்றம் விதித்த கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காததன் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசு திட்டமிட்டு துரோகம் செய்திருக்கிறது. மத்திய அரசின் இந்த துரோகத்தை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். அதேபோல் மத்திய அரசின் துரோகத்துக்கு துணைபோன தமிழக அரசை தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள் என்று அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாவிட்டால் அடுத்து மேற்கொள்ள வேண்டிய போராட்டங்கள் குறித்து இன்று சென்னை தியாகராயநகர் பர்கிட் சாலையில் உள்ள ஸ்ரீ மகாலில் அன்புமணி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாய அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தமிழகத்தின் ஒட்டுமொத்த உணர்வையும் வெளிப்படுத்தும் வகையில் ஏப்ரல் 11ஆம் தேதியன்று முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.