கண்முன்னே 3 பேர் மரணம்! மனமெல்லாம் சாதிக்கும் எண்ணம்! எவரெஸ்ட் சிகரம் ஏறிய தமிழக மீனவ இளைஞர் ரிடர்ன்
சென்னை: கண் முன்னால் 3 பேரின் மரணத்தை கண்ட பிறகும் மனம் தளராமல் எவரெஸ்ட் சிகரம் ஏறி தமிழகத்தைச் சேர்ந்த மீனவ இளைஞர் சாதித்துள்ளார்.
சென்னை அருகே உள்ள கோவளத்தை சேர்ந்தவர் ராஜசேகர் பச்சை. அலைச்சறுக்கு விளையாட்டு வீரரான இவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரிய வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்துவந்தார்.
இதற்காக 9 மாதங்கள் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வந்த ராஜசேகர், கடந்த 19ஆம் தேதி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி தனது வாழ்நாள் சாதனை புரிந்தார்.

இதனிடையே கண் முன்னால் 3 பேர் மரணத்தை தழுவியும், சற்றும் கலங்காமல் தன் இலக்கை தொட்ட மன நிறைவுடன் நேற்றிரவு சென்னை திரும்பினார் ராஜசேகர் பச்சை.
அப்போது அவருக்கு அவரது நண்பர்கள், மற்றும் குடும்பத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சாதாரண மீனவ குடும்பத்தை சேர்ந்த இளைஞர் எந்தவொரு பெரிய பொருளாதார பின்புலமும் இல்லாமல் எவரெஸ்ட் சிகரம் ஏறி தமிழ்நாட்டுக்கு பெருமை தேடிக் கொடுத்திருக்கிறார்.
இதனிடையே சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ராஜசேகர் பச்சை, யாரும் எடுத்தவுடன் எந்த சாதனையும் செய்ய முடியாது என்றும் விடா முயற்சியுடன் எந்தவொரு காரியத்தை யார் மேற்கொள்கிறார்களோ அவர்கள் தான் சாதனையாளர்களாக ஆவார்கள் எனவும் கூறினார்.
ராஜசேகர் பச்சை எவரெஸ்ட் சிகரம் ஏறிய போது அங்கு மைனஸ் 40 டிகிரி என்ற அளவில் குளிர் வாட்டி வதைத்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இருமல் உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications