தமிழகத்தில் டிசம்பருக்கு மேல் மழை பெய்யும்- நல்ல செய்தி சொன்ன ரமணன்
சென்னை: வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு மக்களை வாட்டி எடுத்தது. வெள்ளத்தில் மிதக்க வைத்தது. இந்த ஆண்டு எப்போது மழை பெய்யும் என்று ஏங்க வைத்திருக்கிறது. அக்டோபரில் இறுதியில் தொடங்கிய மழை ஒரு சில தினங்கள் மட்டுமே பெய்தது. நவம்பர் மாதத்தில் வெயிலோடு, குளிரோடு கடந்து விட்டது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறினாலும் மழை மட்டும் பெய்தபாடில்லை. சென்னையில் நீர்தேங்கங்களில் நீர் மட்டம் குறைந்து வருகிறது குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது என்று இப்போதே எச்சரிக்கை மணி அடிக்கத் தொடங்கி விட்டனர்.
சென்னை வானிலை எச்சரிக்கை
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் டிசம்பர் 2ம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும் என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
ரமணன் நல்ல செய்தி
தமிழகத்தில் டிசம்பர் 2ஆம் தேதிக்குப் பிறகு மழை வரக்கூடும் என சென்னை வானிலை மைய முன்னாள் இயக்குநரும் மழை மன்னன் என்று அழைக்கப்படுபவருமான எஸ்.ஆர்.ரமணன் கூறியுள்ளார்.
டிசம்பரில் மழை
சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது மழை வருவதற்கான நிகழ்வு ஏதும் ஏற்படவில்லை. வந்த ஒரு நிகழ்வும் வடக்கு நோக்கி சென்றுவிட்டது. சமீபத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள் இலங்கைக்கு தெற்கே சென்று விட்டதால் நமக்கு மழை பெய்யவில்லை. கணினி சார்ந்த கணிப்புகளை வைத்து பார்க்கும்போது அடுத்த ஒரு வார காலத்துக்கு பெரும் மழை பெய்வதற்கு வாய்ப்பில்லை. டிசம்பர் 2ஆம் தேதிக்கு பிறகு மழை வரக்கூடும்.
மழை குறைவு
நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் 10 செ.மீ. வரையிலும் மற்ற உள் மாவட்டங்களில் 2 செ.மீ. வரையிலும் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.
அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் சராசரியாக 44 செ.மீ. மழை பெய்ய வேண்டும். தற்போது 9 செ.மீ. வரைதான் மழை பெய்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டில் 33 சதவிகிதத்திற்கும் குறைவாக மழை பெய்துள்ளது.
குளிருக்கு காரணம்
தற்போது அதைவிட மோசமான நிலையில் உள்ளது. மன்னார் வளைகுடாவில் நிகழ்வு ஏற்பட்டால் மட்டுமே தமிழகம் முழுவதிலும் மழை பெய்யும். தற்போது வானம் தெளிந்து இருப்பதால் வெப்பம் குறைந்து குளிர் நிலவி வருகிறது என்றும் ரமணன் கூறியுள்ளார்.
மழை மன்னன் ரமணன்
கடந்த ஆண்டு நவம்பர் டிசம்பர் மாதங்களில் ரமணன் சொன்ன வானிலை அறிக்கை அப்படியே பலித்தது. கல்லூரி, பள்ளி மாணவர்கள் ரமணனை ஹீரோவாக கொண்டாடினர். இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி ரமணன் பணி ஓய்வு பெற்று விட்டார். புதிதாக பாலச்சந்திரன் இயக்குநாக பொறுப்பேற்று வானிலை எச்சரிக்கை கூறியுள்ளார்.