ஆண்களுக்கு இலவச குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை.. ஊக்கத்தொகையுடன் அழைக்கும் தமிழக அரசு
ஊட்டி: ஆண்களுக்கு இலவச குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யப்படும் என்றும். 1100 ரூபாய் ஊக்கத்தொகை அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான சிறப்பு முகாம் நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை வரும் 28ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு செய்யப்படும் குடும்ப நல அறுவை சிகிச்சையை விட ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை (வாசக்டமி) மிகவும் எளிதானது. ஆனால் இதுபற்றி போதிய புரிதல்கள் இல்லாததால், தமிழகத்தில் ஆண்கள் பெருமளவில் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்துகொள்ள முன்வருவது இல்லை..

எனினும் ஆண்களுக்கான அறுவை சிகிச்சைக்கு ஆண்டுதோறும் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது. இதன்படி, 2022-23-ம் ஆண்டில் ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை (வாசக்டமி) தமிழகம் முழுவதும் 7,000 பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 1,304 பேருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மொத்தமாக, 18.6 சதவீதம் மட்டுமே இலக்கு எட்டப்பட்டது.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல அறுவை சிகிச்சை வார விழா கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆண்களுக்கு இலவச குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முகாம்கள் அமைக்கப்பட உள்ளது.
இந்நிலையில் நீலகிரி மாவட்ட மருத்துவ, ஊரக நலப் பணிகள் மற்றும் குடும்ப நல துணை இயக்குனர் பொறுப்பு சிவகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறுகையில், "நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதல் டிசம்பர் 4-ந் தேதி வரை ஆண்களுக்கான நவீன குடும்ப நல அறுவை சிகிச்சை வார விழா கடைபிடிக்கப்படுகிறது. இதன் பேரில் வருகிற 28ஆம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை நடைபெறும்.
இலவசமாக செய்யப்படும் இந்த ஆண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சைக்கு அரசின் சார்பாக ரூ. 1,100 ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இதில் தகுதியுள்ள அனைத்து ஆண்களும் நவீன குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொண்டு பயன்பெறலாம்." இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications