தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அண்ணாமலை டெல்லி பயணம்..காரணம் என்ன?
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும்., பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையும் இன்று டெல்லிக்கு செல்கின்றனர். தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஜே.பி.நட்டாவிடம் அண்ணாமலை பேசுவார் என தகவல்.
சென்னை: தமிழக அரசியல் களம் பரபரப்பாக உள்ள இந்த சூழ்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்கிறார். அதிமுக பாஜக இடையே கூட்டணியில் உரசல் நிலவும் நிலையில் மாநிலத்தலைவர் அண்ணாமலையும் இன்று டெல்லி செல்வது பரபரப்பை அதிகரித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ஆளுநர் ரவி சட்டசபை மரபுப்படி உரை நிகழ்த்தி 2023ஆம் ஆண்டுக்கான சட்டசபை கூட்டத்தொடரை தொடக்கி வைத்தார். அப்போது ரவி தமிழ்நாடு என்ற வார்த்தையை தவிர்த்தார். அரசு தயாரித்து கொடுத்த உரையில் இருந்த சில வார்த்தைகள், பாராக்களை வாசிக்காமல் தவிர்த்து விட்டார். இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தின் படி ஆளுநர் உரையை அவைக்குறிப்பில் இடம்பெற செய்யவில்லை. மாறாக அரசு தயாரித்த உரை மட்டுமே அவைக்குறிப்பில் இடம் பெற்றது. இந்த நிகழ்வுகள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.
தமிழக சட்டசபையில் ஆளுநர் உரையாற்றியபோது நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, திமுக எம்.பி.க்கள் வில்சன் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் அடங்கிய குழுவினர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை கடந்த 12ஆம் தேதி சந்தித்தனர். இதனையடுத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதியன்று டெல்லி சென்று திரும்பினார்.

சட்டசபையில் மசோதா
தமிழ்நாடு சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் தடை சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில் மீண்டும் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது.

ஆளுநர் ரவி, அண்ணாமலை பயணம்
இந்த சூழ்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்கிறார். காலை 10 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி செல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அதே நேரத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் இன்று டெல்லி செல்கிறார். அவர் டெல்லியில் மாநிலத்தலைவர் ஜே.பி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்து பேசுகிறார்.

பாஜக - அதிமுக உரசல்
தமிழ்நாட்டில் அதிமுக பாஜக இடையேயான கூட்டணியில் உரசல் நீடிக்கிறது. அதிமுக உடன் பாஜக தேர்தல் கூட்டணி வைத்தால் மாநிலத்தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் அண்ணாமலை. அதற்கு மறுநாளே தான் கூட்டணி குறித்து பேச மாட்டேன் என்றும் தேர்தல் நேரத்தில் தேசிய தலைவர்கள் கூட்டணி குறித்து முடிவு செய்வார்கள் என்று கூறினார்.

டெல்லி செல்லும் அண்ணாமலை
இந்த நிலையில் இன்றைய தினம் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை டெல்லி செல்கிறார். இந்நிலையில், கூட்டணி விவகாரம், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள், உட்கட்சி விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிப்பதற்காக இன்றைய தினம் அண்ணாமலை டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் நட்டா ஆகியோரைச் சந்தித்துப் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது.

பாஜக தனித்து போட்டியிடுமா?
தமிழகத்தில் தனித்துப் போட்டியிடுவது தொடர்பாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் கூட்டத்தில் அண்ணாமலை பேசினாராம். இந்தக் கருத்துக்கு பாஜகவிலேயே ஆதரவும், எதிர்ப்பும் நிலவுகின்றன. எனினும், கூட்டணி குறித்து தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்று பாஜக மூத்த தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications