எஸ்.பி. சத்யப்ரியாவின் இடைநீக்கத்தை திரும்பப் பெற தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவு
சென்னை: ஐபிஎஸ் அதிகாரியான எஸ்.பி.சத்யப்ரியாவின் இடைநீக்கம் சட்டவிரோதம். எனவே அதை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
தெற்கு சூடானுக்கு இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட அமைதி காக்கும் படையில், இணைந்து பணியாற்றுமாறு எஸ்.பி. சத்யப்ரியாவுக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து 2013ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி அவர் சூடான் சென்றார். ஆனால் அதற்கான அனுமதியை தமிழக அரசு தரவில்லை. மேலும், அவர் முறையாக விண்ணப்பிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.
இதையடுத்து 2014ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி சத்யப்ரியா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து தனது பணி நீக்க உத்தரவை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் முறையிட்டார் சத்யப்ரியா. இதைத் தொடர்ந்து அக்டோபர் 28ம் தேதி மத்திய உள்துறை அமைச்சக துணைச் செயலாளர் ஜி.சி.யாதவ் தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் அபூர்வ வர்மா மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், சத்யப்ரியாவின் இடைநீக்கம் நியாயமில்லாதது, சட்டத்திற்குப் புறம்பானது. எனவே அதை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று யாதவ் அறிவுறுத்தியுள்ளார்.