தமிழக அரசின் நல் ஆளுமை விருதுகள் அறிவிப்பு.. கட்டையால் சிறுத்தையை விரட்டிய முத்துமாரிக்கு விருது!
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் நல் ஆளுமை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Recommended Video
சென்னை: நாட்டின் 72 வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசின் நல்ஆளுமை விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.
அதன்படி அப்துல்கலாம் விருது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள வான்வெளி ஆய்வு நிறுவனமான தக்ஷா குழுவுக்கு அறிவிக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.
கட்டையால் சிறுத்தையை விரட்டிய கோவை மாவட்டம் பெரியகல்லார் கிராமத்தை சேர்ந்த முத்துமாரி கல்பனா சாவ்லா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கல்பனா சாவ்லா விருதை வழங்கி கவுரவித்தார். கடந்த மே மாதம் தனது மகளை இழுத்துச்சென்ற சிறுத்தையை தனி ஆளாக கட்டையை கொண்டு அடித்து விரட்டினார் முத்துமாரி.
தமிழக அரசின் சிறந்த துறைகளாக பதிவுத்துறை, உணவுத்துறை,சுகாதாரத்துறை ஆகிய 3 துறைகள் முதல் மூன்று இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு இன்று விருதுகள் வழங்கப்பட்டன.
உள்ளாட்சி அமைப்புக்களில் சிறந்த மாநகராட்சியாக திருப்பூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக திருப்பூர் நகராட்சிக்கு 25 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
சிறந்த நகராட்சியாக தேர்வு செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு 15 லட்சம் ரூபாயும் , தேனி மாவட்டம் கம்பத்திற்கு 10 லட்சம் ரூபாய், நாகை மாவட்டம் சீர்காழிக்கு 5 லட்சம் ரூபாய் பரிசுகள் வழங்கப்பட்டன.
சிறந்த பேரூராட்சியாக முதல் மூன்று இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்திற்கு 10 லட்சம் ரூபாயும், தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டிக்கு 5 லட்சம் ரூபாயும், தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டிற்கு 3 லட்சம் ரூபாயும் பரிசுகள் வழங்கப்பட்டன.
காவேரி தொழில்நுட்பக் குழுமத்திற்கு தமிழக அரசின் நல் ஆளுமை விருது கொடுக்கப்பட்டது. விருதை குழுத் தலைவர் ஆர். சுப்ரமணியம் பெற்றுக் கொண்டார்.