விவசாய கடன்தான் கிராம மக்கள் கவலை.. ஒலி மாசுதான் நகரவாசிகளின் பிரச்சினை: தமிழக 'பல்ஸ்'
சென்னை: விவசாய கடன் அதிக மக்களை சென்றடையவில்லை என்று தமிழக கிராமப்புற மக்களில் பெரும்பான்மையோர் கருத்து தெரிவித்துள்ளனர். கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பும் பெருகவில்லை என்பது அவர்கள் குற்றச்சாட்டு.
ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் (The Association for Democratic Reforms) என்ற அமைப்பு சுமார் 16 ஆயிரம் வாக்காளர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பில் இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்துக்கணிப்பு அம்சங்கள் 'ஒன்இந்தியாவிடம்' உள்ளன. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் சிலவற்றை பார்க்கலாம்.
மூன்று தேவைகள்
தமிழக கிராமப்புற மக்களிடம் அவர்களின் மூன்று முக்கியமான எதிர்பார்ப்புகள் என்ன என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. தங்களின் மூன்று முக்கிய தேவைகளை அவர்கள் வரிசைகிரமமாக வகைப்படுத்தியுள்ளனர்.
விவசாய கடன்
விவசாய கடன், வேலை வாய்ப்பு மற்றும் விவசாயத்தேவைக்கான மின்சார அளிப்பு ஆகிய இம்மூன்றும்தான், கிராமப்புற மக்களின், மிக முக்கிய தேவைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
சதவீதம்
24.75% வாக்காளர்கள், விவசாய கடன் பிரச்சினைதான் தங்களின் முக்கிய கவலை என்று தெரிவித்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக, 22.88% வாக்காளர்கள், தங்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை தெரிவித்துள்ளனர்.
மூன்றாம் இடம் மின்சப்ளை
20.72% மக்கள், விவசாயத்திற்கு போதிய மின்சார சப்ளை கிடைப்பதில்லை என்பதை தங்களின் முக்கிய பிரச்சினைகளாக தெரிவித்துள்ளனர். விவசாயமும், வேலைவாய்ப்பும்தான் கிராமங்களின் ஜீவாதார பிரச்சினை என்பது இக்கருத்து கணிப்பு கண்டறிந்துள்ள உண்மை.
அடுத்தடுத்த தேவைகள்
68 சதவீத மக்கள் மேற்கண்ட காரணங்களை குறிப்பிடும் நிலையில், இதற்கு அடுத்தபடியாக, ரோடு மற்றும் போக்குவரத்து, குடிநீர் மாசடைதல், நீர்பாசனத்திற்கு தண்ணீர், விதை, உரம் பற்றாக்குறை, மருத்துவமனை வசதிகள் போன்றவை தேவைகளாக உள்ளன.
ஒலிமாசு
நகரப்புறங்களில் உள்ள வாக்காளர்களின் தேவை மாறுபட்டதாக உள்ளது. நகர மக்களில் பெரும்பாலானோருக்கு வேலைவாய்ப்புதான் முக்கிய தேவையாக உள்ளது. அடுத்தபடியாக ஒலி மாசு விஷயத்தை குறைக்க வேண்டும் என்பது நகரவாசிகள் கோரிக்கையாக உள்ளது. குடிநீர் மூன்றாவது தேவையாக உள்ளது.
நகரவாசிகள்
இம்மூன்று தேவைகளை தொடர்ந்து, ஆரோக்கியம், சாலை, டிராபிக் நெரிசல் போன்றவை நகரவாசிகளால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. குநீர் மாசடைதல், சட்டம்-ஒழுங்கு போன்றவையும் அடுத்தடுத்த முக்கிய பிரச்சினைகளாக பேசப்படுகின்றன.