நிலம், வீடு வாங்குவோருக்கு ஹேப்பி நியூஸ்.. வில்லங்கத்துக்காக வீணாக அலைய வேண்டாம்! கைக்கே வருதாமே!
சென்னை: நிலம், வீடு உள்ளிட்ட அசையா சொத்துக்கள் தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறையின் கீழ் பதிவு செய்யப்பட்டு, வருவாய் ஆவணங்களில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் பொது மக்களுக்கு பத்திர பதிவு நடந்த அன்றே பத்திரத்தை வழங்கவும், பதிவு நடந்த சில மணி நேரத்தில் மொபைல் போனில் வில்லங்கச் சான்று அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஸ்டார் 2.ஓ சாஃப்ட்வேர் என்ற மென்பொருள் தமிழக சார்-பதிவாளர் அலுவலகங்களில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதிக அளவில் நிலங்கள் வீட்டுமனைகளாக மாறி வருகிறது. வீடுகளை சுற்றி இருந்த விவசாய நிலங்கள் தற்போது வீடுகளாக மாறி வருகிறது. மேலும் தரிசு நிலங்கள், விவசாய பயன்பாட்டுக்கு ஒத்து வராத நிலங்கள் வீட்டுமனைகளாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அவ்வாறு பிரிக்கப்படும் நிலங்கள் பத்திரப் பதிவுத் துறை மூலம் பதிவு செய்யப்படுகிறது. மேலும் ஏற்கனவே இருக்கும் வீடுகள் நிலங்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்களும் பத்திரப் பதிவுத் துறை மூலம் ஒரு நபரிடம் இருந்து மற்றொருவருக்கு மாற்றப்படுகிறது. பின்னர் அது வருவாய் துறை சார்ந்த ஆவணங்களில் பதியப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாகவே தமிழகத்தில், ஆவணப் பதிவு மோசடி, போலி ஆவணம், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகளால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதை அடுத்து போலி ஆவணப் பதிவு உள்ளிட்டவற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் பத்திரப்பதிவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு விதித்திருக்கிறது.
அந்த வகையில் அசல் ஆவணங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது நிலம் வாங்குவோருக்கு புதிய வசதியாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட நாளிலேயே பொது மக்களுக்கு பத்திரத்தை வழங்க வேண்டும் எனவும், சொத்து குறித்து கள ஆய்வு தவிர்த்து மற்ற அனைத்து பத்திரங்களையும் அதே நாளில் திருப்பித் தர வேண்டும் என சார் பதிவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இதற்காக சார்பதிவாளர் அலுவலகங்களில் புதிய மென்பொருளும் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. பத்திரப் பதிவு பணிகளை விரைவில் முடித்தாலும், சொத்து பரிமாற்றம் உள்ளிட்ட தகவல்களையும் வில்லங்கச் சான்றையும் பதிவுத்துறையில் சேர்க்க சில நாட்கள் ஆகிறது. அதற்கு பிறகு தான் குறிப்பிட்ட அந்த சொத்து குறித்த தகவல்களையும் வில்லங்கச் சான்றிதழ்களையும் பொதுமக்கள் பெற முடியும்.
இந்த நிலையில் பத்திரம் பதிவு செய்த அதே நாளில் பத்திரம் கிடைக்கும் முன்பாகவே வில்லங்கச் சான்றிதழை சம்பந்தப்பட்ட நபருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சொத்து விற்பனை பத்திரங்கள் பதிவாகும் போது அந்த விவகாரங்கள் பதிவுத்துறையின் தகவல் தொகுப்பில் அப்லோடு செய்யப்படுகிறது. அது முடிந்தவுடன் பத்திரப்பதிவு செய்தவருக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும். அதில் உள்ள லிங்கை கிளிக் செய்தால் கடைசியாக நடந்த பத்திரப்பதிவு விபரம் அடங்கிய வில்லங்க சான்றிதழ் கிடைக்கும்.
இதை எந்தவித கட்டணமும் இன்றி பொதுமக்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம். அந்த லிங்கில் 30 நாட்களுக்கு வில்லங்கச் சான்றிதழ் அப்படியே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது சொத்து வரி, மின்சார இணைப்பு உள்ளிட்டவற்றில் பெயர் மாற்ற உதவியாக இருக்கும் என்கின்றனர். மேலும் பத்திரப்பதிவு நடந்த அன்றே பத்திரத்தை பொதுமக்களுக்கு வழங்க சார் பதிவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications